ஜம்மு - காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!
ஜம்மு - காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டது குறித்து...
ஜம்மு - காஷ்மீரில், பாதுகாப்புப் படையினர் உடனான துப்பாக்கிச் சண்டையில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
ஜம்மு - காஷ்மீரில், ராணுவத்தின் சிஐஎஃப் டெல்டா பிரிவு, ஜம்மு - காஷ்மீர் காவல் துறை மற்றும் மத்திய ரிசர்வ் காவல் படையினர் இணைந்து ஆபரேஷன் ட்ராஷி -1 எனும் பெயரில் பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், கிஷ்த்வாரின் டிச்சார் பகுதியில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகளுடன் பாதுகாப்புப் படையினர் இன்று (பிப். 4) மாலை 5.45 மணியளவில் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டனர். இதில், பயங்கரவாதி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.
Advertisement
Advertisement
இதேபோல், இன்று காலை உதம்பூர் மாவட்டத்தின் பசந்த்கார் வனப்பகுதியில், பாதுகாப்புப் படையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, மிகவும் சவாலான வனப் பகுதிகள் மற்றும் மலைப் பகுதிகளில் பதுங்கியுள்ள பயங்கரவாதிகளைப் பிடிக்கும் நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக, கிஷ்தவாரில் கடந்த ஜன. 18 அன்று பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.