நேபாளத்தின் முதல் பெண் பிரதமர் சுசீலா கார்கிக்கு மோடி வாழ்த்து!
நேபாளத்தின் முதல் பெண் பிரதமர் சுசீலா கார்கிக்கு மோடி வாழ்த்து!
நேபாளத்தின் முதல் பெண் பிரதமர் சுசீலா கார்கிக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்து பதிவிட்டுள்ளார்.
நேபாளத்தின் இடைக்காலப் பிரதமராக (இடைக்கால அரசின் தலைவா்) உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி சுசீலா காா்கி வெள்ளிக்கிழமை நியமிக்கப்பட்டு, வெள்ளிக்கிழமை இரவே உடனடியாகப் பதவியேற்றுக் கொண்டாா்.
நேபாள அரசால் சமூக ஊடக தளங்களுக்கு விதிக்கப்பட்ட தடையைத் தொடர்ந்து இளைஞர்கள் அணிதிரண்டு தலைநகர் காத்மாண்டுவில் திங்கள்கிழமை(செப். 8) பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். நேபாளத்தில் ஆட்சியாளா்களின் ஊழல் மற்றும் அரசின் பிற நடவடிக்கைகள் சமூக ஊடக தளங்களுக்கு விதிக்கப்பட்ட தடை ஆகியவற்றுக்கு எதிராக நடைபெற்ற போராட்டம் கலவரமாக வெடித்தது.
நேபாளத்தில் இளைஞா்களின் போராட்டம் தீவிரமடைந்ததைத் தொடா்ந்து பிரதமா் பதவியை கே.பி.சா்மா ஓலி செவ்வாய்க்கிழமை ராஜிநாமா செய்தாா்.
இந்த நிலையில், நேபாளத்தின் முதல் பெண் தலைமை நீதிபதி சுசீலா கார்கி அந்நாட்டின் இடைக்கால அரசின் தலைவராக கடந்த செப். 10 தெரிவு செய்யப்பட்டார். இதையடுத்து, அவருக்கு அந்நாட்டின் அதிபர் வெள்ளிக்கிழமை(செப். 12) பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
இதனைத்தொடர்ந்து, பிரதமர் மோடியின் அதிகாரபூர்வ எக்ஸ் தளப் பக்கத்திலிருந்து இன்று(செப். 13) மாலை வெளியிட்டுள்ள பதிவில், ‘140 கோடி இந்தியர்கள் சார்பாக சுசீலா கார்கிக்கு வாழ்த்து தெரிவிப்பதாக’ குறிப்பிட்டுள்ளார். மேலும், சுசீலா கார்கி நேபாளத்தில் அமைதி, நிலைத்தன்மை மற்றும் வளமை நிலவ வழிகாட்டுவார் என்று நம்புவதாகவும் குறிப்பிட்டுள்லார்.