முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய அமைச்சர் அமித் ஷா பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி, வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில், மனம் கவர்ந்த தலைவர் மற்றும் தலைசிறந்த நிர்வாகியாக எண்ணற்ற மக்களின் இதயங்களிலும், மனங்களிலும் ஜெயலலிதா இடம் பிடித்துள்ளார். அவரது வாழ்க்கைப் பயணம் மன உறுதி மற்றும் தீர்மானத்துடன் இருந்தது.
தமிழ்நாட்டின் முதல்வர் என்ற முறையில், பெண்களுக்கு அதிகாரமளித்தல் குறித்து வலுவான நோக்கத்துடனும், சமூக நீதி மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய நலத்திட்டங்களாலும் இயக்கப்பட்ட நிர்வாகத்தில் சிறந்த ஆட்சியாளராக திகழ்ந்தார்.
கருணை, உறுதி என்ற இரண்டு பண்புகளையும் அவர் கொண்டிருந்தார். அவருடனான எனது கலந்துரையாடல்களை மிகுந்த மகிழ்ச்சியோடு நான் நினைவுகூர்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, முன்னாள் தமிழக முதல்வரும் மக்கள் தலைவருமான ஜெ.ஜெயலலிதாவின் பிறந்த தினத்தில் அவருக்கு புகழஞ்சலிகள்.
ஏழைகளின் நலனுக்காகவும், பெண்களின் உரிமைக்காகவும் அவர் அர்ப்பணிப்புடன் செயல்பட்டதன் மூலம், தமிழ்நாட்டின் வளர்ச்சியை மறுசீரமைத்து, அவரது ஆட்சியின் பலன்களை கடைக்கோடி மக்கள் வரை சென்றடைவதை உறுதி செய்தார்.
பொது சேவையில் அவரது அர்ப்பணிப்பு அனைவருக்கும் எப்போதும் ஒரு உத்வேகத்தை தரும் என்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவும் பாஜகவும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஒன்றிணைந்து போட்டியிடவுள்ள நிலையில், அதிமுகவை சேர்ந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு அமித் ஷா புகழாரம் சூட்டியுள்ளார்.
இதனிடையே, ஜெயலலிதாவின் பிறந்தநாளன்று ஒரு முக்கிய முடிவை அறிவிப்பேன் என்று சசிகலா கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் சசிகலா சார்பில் இன்று நடைபெறும் ஜெயலலிதா பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் முக்கிய முடிவை அறிவிக்கவிருப்பதாகக் கூறிய நிலையில், சசிகலாவும் புதிய கட்சியைத் தொடங்கவிருக்கிறாரா என்று சமூக ஊடகங்களில் கேள்வி எழுந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.