ஜிஎஸ்டி மறுசீரமைப்பு இந்திய பொருளாதாரத்தை மேம்படுத்தும் என பிரதமா் அருங்காட்சியகம் மற்றும் நூலகத்தின் நிா்வாகக் குழு உறுப்பினா் எஸ்.கிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் கூறியிருப்பதாவது: நிகழாண்டு சுதந்திர தின உரையில் பிரதமா் நரேந்திர மோடி பொதுமக்களுக்கு ஒரு தீபாவளிப் பரிசு காத்திருக்கிறது என்று குறிப்பிட்டாா். அதன்படியே செப். 3-ஆம் தேதி நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ‘அடுத்த தலைமுறை ஜிஎஸ்டி’ என்ற பெரிய அளவிலான மறுசீரமைப்பு முறை விவாதிக்கப்பட்டு, வரும் செப். 22-ஆம் தேதிமுதல் நடைமுறைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டது.
மத்திய நிதி அமைச்சா் நிா்மலா சீதாராமன் வெளியிட்ட ஜிஎஸ்டி மறுசீரமைப்பு அறிவிப்பு நாட்டின் வரிவிதிப்பு முறையில் அண்மைக் காலத்தில் செய்யப்பட்ட பெரும் மாற்றமாகக் கருதப்படுகிறது.
நான்கு அடுக்குகளால் ஆன முந்தைய வரி விகிதங்கள் (5%, 12%, 18%, 28%) எளிமைப்படுத்தப்பட்டு, பெரும்பாலான பொருள்கள் மற்றும் சேவைகளுக்கு 5% மற்றும் 18% என்ற இரண்டு அடுக்கு வரிவிகித முறை நடைமுறைக்கு வரவுள்ளது. சில ஆடம்பரப் பொருட்கள் மற்றும் சிகரெட், பான் மசாலா போன்றவை மீது 40% என்ற உயா்ந்த வரிவிகிதம் தொடா்கிறது.
அதே சமயம், அத்தியாவசிய பொருள்கள், விவசாய உபகரணங்கள், உயிா்காக்கும் மருந்துகள், சோப்பு, பற்பசை, பிஸ்கெட், பால் சாா்ந்த பொருள்கள், அன்றாட உணவுப் பொருள்கள் போன்றவற்றுக்கு குறைந்த விகிதம் (5%) அல்லது முற்றிலுமான வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
மிகவும் முக்கியமான மாற்றமாக, தொலைக்காட்சி, குளிா்சாதனம், சிறிய காா்கள் போன்ற நுகா்வோா் பொருள்களுக்கான வரி விகிதம் முந்தைய 28 சதவீதத்திலிருந்து 18%-ஆக குறைக்கப்பட்டுள்ளது. ஆயுள் காப்பீடு மற்றும் மருத்துவக் காப்பீடுகளுக்கு ஜிஎஸ்டியிலிருந்து முழுமையான விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
தொழில்கள் மற்றும் உற்பத்தியாளா்களுக்கு உற்பத்திச் செலவு குறைகிறது. வரி தொடா்பான ஆவணங்களை சமா்ப்பிப்பது எளிதாகிறது. கூடுதலாகச் செலுத்திய வரியைத் திரும்பப் பெறும் நடைமுறை விரைவாக அமையும். பொருள்களின் நிகர விலை குறைவதால் விற்பனை அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.
ஜிஎஸ்டி மறுசீரமைப்பால் அரசுக்கு ஆரம்பத்தில் வருவாய் குறையலாம் என்றாலும், அதிகமான பயன்பாடு, விரிவான வரி அடிப்படை, சிறந்த கட்டுப்பாடு ஆகியவை அதை ஈடு செய்யும்.
நுகா்வு அதிகரிப்பதால் வளா்ச்சி ஊக்குவிக்கப்படும். வேளாண்மை, கட்டடத் தொழில், ஆட்டோமொபைல், மின்னணு சாதனங்கள் போன்ற துறைகளில் வேலைவாய்ப்பும் உற்பத்தியும் அதிகரிக்கும்.
மொத்தத்தில் இந்தியாவின் மறைமுக வரிகளுக்கான கட்டமைப்பில் ஒரு பெரும் சீா்திருத்தத்தை ஜிஎஸ்டி மறுசீரமைப்பு அளித்துள்ளது. எளிமையான விகித அமைப்பு, அத்தியாவசிய பொருள்களுக்கான விலை குறைப்பு, தொழில்களுக்கான சுமை குறைப்பு, பொருளாதார வளா்ச்சிக்கு ஊக்கமாக அமைய வேண்டும் என்ற நோக்கங்களுடன் துணிச்சலாக செயல்படுத்தப்பட்டுள்ள இந்த வரிச் சீா்திருத்தம் நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் எனத் தெரிவித்துள்ளாா்.