ஏப். 8ல் பவானிபூர் தொகுதியில் மமதா வேட்புமனு தாக்கல்!
பவானிபூர் தொகுதியில் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளது பற்றி..
மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி வருகிற ஏப். 8 ஆம் தேதி பவானிபூர் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
294 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட மேற்குவங்கத்தில், 152 தொகுதிகளுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு ஏப். 23 ஆம் தேதியும் 142 தொகுதிகளுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு ஏப். 29 ஆம் தேதியும் நடைபெற உள்ளது. மே 4 அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
தொடர்ந்து 4 ஆவது முறையாக ஆட்சியமைக்க திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மமதாவும் அதேநேரத்தில் முதல்முறையாக ஆட்சியைக் கைப்பற்ற பாஜக தலைவர்களும் முனைப்பு காட்டி வருகின்றனர்.
இந்நிலையில் 152 தொகுதிகளுக்கான முதல் கட்டத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் மார்ச் 30 தொடங்கி ஏப். 6 வரை நடைபெறுகிறது. இதில் நந்திகிராம் தொகுதியில் மாநில எதிர்க்கட்சித் தலைவரும் பாஜக மூத்த தலைவருமான சுவேந்து அதிகாரி வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.
மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி பவானிபூர் தொகுதியில் போட்டியிடுகிறார். இந்த தொகுதிக்கு இரண்டாம் கட்டத் தேர்தலில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதையொட்டி ஏப். 8 ஆம் தேதி பவானிபூர் தொகுதியில் மமதா வேட்புமனு தாக்கல் செய்வார் என்று கூறப்படுகிறது. அதே தொகுதியில் சுவேந்து அதிகாரி ஏப். 2 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்கிறார்.