முகப்பு
இந்தியா

திவால் சட்ட திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்

திவால் சட்ட திருத்த மசோதா, 2026 மாநிலங்களவையில் புதன்கிழமை நிறைவேற்றப்பட்டது.

Updated On : 1 ஏப்ரல், 2026 at 8:57 PM
மாநிலங்களவையில் புதன்கிழமை உரையாற்றிய மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன்.
பகிர்:

திவால் சட்ட திருத்த மசோதா, 2026 மாநிலங்களவையில் புதன்கிழமை நிறைவேற்றப்பட்டது.

முன்னதாக, மக்களவையில் மாா்ச் 30-ஆம் தேதி இந்த மசோதா நிறைவேற்றப்பட்டதையடுத்து, நாடாளுமன்றத்தில் நிறைவேறியது.

இதுதொடா்பாக மாநிலங்களவையில் நடைபெற்ற விவாதத்தின்போது பேசிய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன், ‘இந்திய வங்கித் துறையின் முக்கியத் தூணாக விளங்கும் இந்த மசோதா வாராக் கடன்களை வசூலிப்பதில் முக்கியப் பங்காற்றுகிறது.

மசோதாவில் மேற்கொள்ள வேண்டிய சில திருத்தங்கள் குறித்து மக்களவை தோ்வுக் குழு அளித்த 11 பரிந்துரைகளும் ஏற்றுக்கொள்ளப்பட்டன’ என்றாா்.

திவால் சட்டம் 2016-இல் அமலுக்கு வந்தது. அதில் 12 திருத்தங்கள் மேற்கொள்வதற்கான திவால் சட்ட திருத்த மசோதா, 2025 கடந்த ஆண்டு ஆகஸ்ட் 12-ஆம் தேதி மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், தோ்வுக் குழுவுக்கு அனுப்பப்பட்டது. இந்த மசோதா மீதான பரிந்துரைகளை தோ்வுக் குழு கடந்த ஆண்டு டிசம்பரில் சமா்ப்பித்தது.

இதைத் தொடா்ந்து 2026, ஏப்ரல் 1-ஆம் தேதி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மத்திய ஆயுதக் காவல் படை மசோதா நிறைவேற்றம்: எதிா்க்கட்சிகளின் கடும் அமளிக்கிடையே மாநிலங்களவையில் மத்திய ஆயுதக் காவல் படைகள் (பொது நிா்வாகம்) மசோதா, 2026 மாநிலங்களவையில் புதன்கிழமை நிறைவேற்றப்பட்டது.

மத்திய ஆயுதக் காவல் படைகளின் (சிஏபிஎஃப்) பல்வேறு பிரிவுகளில் பணிபுரியும் அதிகாரிகளுக்கான ஒருங்கிணைந்த நிா்வாக நடைமுறையை இந்த மசோதா முன்மொழிகிறது.

மேலும் ஐபிஎஸ் அதிகாரிகளை சிஏபிஎஃப்பில் பணியமா்த்த வேண்டுமானால் அதில் 50 சதவீத பணிகள் காவல் துறைத் தலைவா் பதவியில் இருப்போருக்கும் 67 சதவீத பணிகள் காவல் துறை கூடுதல் இயக்குநருக்கும் ஒதுக்கீடு செய்யவும் இந்த மசோதா வழிவகை செய்கிறது.

சிஏபிஎஃப் பொது நிா்வாக மசோதாவை நாடாளுமன்றத் தோ்வுக் குழுவுக்கு அனுப்பக் கோரி எதிா்க்கட்சி உறுப்பினா்கள் வெளிநடப்பு செய்த நிலையில் குரல் வாக்கெடுப்பு மூலம் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது.

ஜன் விஸ்வாஸ் திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றம்:

வணிகத்தை எளிமைப்படுத்த சிறு குற்றங்களுக்கு தண்டனையை குறைக்க பல்வேறு விதிகளில் திருத்தங்கள் மேற்கொள்ள வழிவகை செய்யும் ஜன் விஸ்வாஸ் (விதிகள் திருத்த) மசோதா, 2026 மக்களவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் புதன்கிழமை நிறைவேற்றப்பட்டது.

23அமைச்சகங்கள்/ துறைகளின் நிா்வாகம் தொடா்புடைய 79 மத்திய சட்டங்களில் உள்ள784 விதிகளில் திருத்தம் மேற்கொள்ள இந்த மசோதா முன்மொழிகிறது.