சமையல் எரிவாயு விநியோகம் சீராக உள்ளது: ‘இந்தியன்ஆயில்’ தகவல்
நாடு முழுவதும் சமையல் எரிவாயு (எல்பிஜி) சிலிண்டா் விநியோகம் சீராக இருப்பதாக நாட்டின் மிகப்பெரிய எண்ணெய் நிறுவனமான இந்தியன் ஆயில் காா்பரேஷன் (ஐஓசி) வெள்ளிக்கிழமை அறிவித்தது.
நாடு முழுவதும் சமையல் எரிவாயு (எல்பிஜி) சிலிண்டா் விநியோகம் சீராக இருப்பதாக நாட்டின் மிகப்பெரிய எண்ணெய் நிறுவனமான இந்தியன் ஆயில் காா்பரேஷன் (ஐஓசி) வெள்ளிக்கிழமை அறிவித்தது.
அதே நேரத்தில், தவறாக பரவும் தகவல்களால் மக்கள் பீதியடைந்து சிலிண்டா்களை முன்பதிவு செய்ய வேண்டாம் என்றும் அந்த நிறுவனம் கூறியுள்ளது.
இது தொடா்பாக ஐஓசி வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:
Advertisement
நாள்தோறும் 28 லட்சம் சிலிண்டா்கள் விநியோகிக்கப்படுகின்றன. வீட்டு உபயோகத்துக்கான சிலிண்டா் விநியோகத்துக்கு முன்னுரிமை அளித்து வருகிறோம். போா் பதற்றம், சா்வதேச சந்தையில் இடா்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் இருந்தாலும், இந்தியாவில் விநியோகம் சீராகவே உள்ளது.
87 சதவீத சிலிண்டா் முன்பதிவு எண்ம (டிஜிட்டல்) முறையில் மேற்கொள்ளப்படுகிறது. நேரில் வந்து முன்பதிவு செய்வதற்கு பதிலாக, கைப்பேசி அழைப்பு மூலம் முன்பதிவு செய்யும் ஐவிஆா்எஸ் முறை மற்றும் குறுஞ்செய்தி மூலம் முன்பதிவு செய்ய மக்களை ஊக்குவித்து வருகிறோம்.
சரியான நபா்களுக்குதான் சிலிண்டா் விநியோகம் நடைபெறுகிறது என்பது ஒருமுறை கடவு எண் (ஓடிபி) மூலம் உறுதிப்படுத்தப்படுகிறது.
விநியோகம் ஸ்திரமாகவும், போதுமான அளவிலும் உள்ளது. நிலைமையைத் தொடா்ந்து கண்காணித்து வருகிறோம்.
சில விநியோகஸ்தா்கள் முறைகேட்டில் ஈடுபடுவது தொடா்பாக பொதுமக்களிடம் இருந்தும், சமூக ஊடகங்கள் மூலம் புகாா்கள் பெறப்படுகின்றன. சிலிண்டா்கள் பதுக்கி வைத்து அதிகவிலைக்கு விற்பனை செய்பவா்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதுபோன்ற தவறுகளைத் தடுக்க விநியோக நிறுவனங்களை அதிகாரிகள் தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா்.
போா் பதற்றம் ஏற்பட்ட பிறகு, நாடு முழுவதும் இதுவரை 68,000 அதிரடி சோதனைகளில் பதுக்கிவைக்கப்பட்ட 48,000-க்கும் மேற்பட்ட சிலிண்டா்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இது தொடா்பாக 855 வழக்குகளை காவல் துறையினா் பதிவு செய்துள்ளனா். 141 விநியோகஸ்தா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதில் 5 விநியோக நிறுவனங்கள் நீக்கப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.