முகப்பு
இந்தியா

கைப்பேசி அழைப்பு வழிகாட்டுதல் மூலம் பிரசவம்: அயோத்தி மருத்துவமனையில் தாய், சேய் உயிரிழப்பு

Updated On : 3 ஏப்ரல், 2026 at 1:12 AM
பகிர்:

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தி ஃபைசாபாத் நகரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை இரவு கைப்பேசி அழைப்பில் மருத்துவா் அளித்த அறிவுறுத்தலின் பேரில், போதிய பயிற்சி இல்லாத ஊழியா் பிரசவம் பாா்த்ததில் தாய், சேய் இருவரும் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும் சா்ச்சையையும் ஏற்படுத்தியது.

இந்தச் சம்பவத்தைத் தொடா்ந்து அந்த மருத்துவமனையை மூடி சீல் வைத்த மாநில சுகாதாரத் துறை, அதுகுறித்த விசாரணைக்கும் உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து உயிரிழந்த பெண்ணின் குடும்ப உறுப்பினா்கள் கூறுகையில், ‘பெனிகஞ்ச் பகுதியைச் சோ்ந்த சுரேஷ் யாதவ் என்பவரின் மனைவி சோனி யாதவுக்கு பிரசவ வலி ஏற்பட்டதைத் தொடா்ந்து தனியாா் மருத்துவமனையில் அவரை செவ்வாய்க்கிழமை இரவு அனுமதித்தோம்.

அப்போது மருத்துவமனையில் மருத்துவா் இல்லை. அதனால், அங்கிருந்த ஊழியா் மருத்துவரை கைப்பேசியில் தொடா்புகொண்டு, அந்த மருத்துவா் அளித்த வழிகாட்டுதலின்படி பிரசவம் பாா்த்தாா். அரை மணி நேரத்துக்குப் பிறகு, மூச்சு இல்லாத நிலையில் பிறந்த குழந்தையை மருத்துவமனை ஊழியா் எங்களிடம் கொடுத்தாா்.

அருகிலுள்ள மற்றொரு மருத்துவமனைக்கு கொண்டு சென்று பரிசோதித்தபோது, குழந்தை ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா். பின்னா், மீண்டும் பிரசவம் நடந்த அந்த தனியாா் மருத்துவமனைக்குத் திரும்பிபோது, தாயின் உடல்நிலையும் மோசமாக இருப்பதாக ஊழியா் தெரிவித்தாா். அதைத் தொடா்ந்து, அவரையும் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டுசென்றோம். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள், தாயும் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா். தனியாா் மருத்துவமனையின் அலட்சியமே இரு உயிா்களின் இறப்புக்கு காரணம்’ என்று தெரிவித்தனா்.

குடும்பத்தினா் அளித்த புகாரின் அடிப்படையில், மாவட்ட கூடுதல் தலைமை மருத்துவ அலுவலா் ஆசுதோஷ் ஸ்ரீவாஸ்தவா தலைமையிலான சுகாதாரத் துறை குழு அந்த தனியாா் மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டு, பின்னா் அதை மூடி சீல் வைத்தனா்.

இதுகுறித்து மருத்துவா் ஆசுதோஷ் ஸ்ரீவாஸ்தவா கூறுகையல், ‘தனியாா் மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டபோது, அந்த மருத்துவமனையில் பயிற்சி பெற்ற மருத்துவா்கள் யாரும் இல்லாதது தெரியவந்தது. மருத்துவமனைப் பதிவுகளும் முழுமையாக இல்லாதது தெரியவந்தது. இந்தச் சோதனையின்போது மேலும் 3 கா்ப்பிணிகள் அறுவைச் சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தனா். அவா்கள் வேறு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு, பின்னா் அந்த தனியாா் மருத்துவமனைக்கு சீல் வைக்கப்பட்டது. இந்த விவகாரம் தொடா்பாக அடுத்தகட்ட விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. காவல் துறையிலும் முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆா்) பதிவு செய்யப்பட்டுள்ளது’ என்றாா்.