பாஜக ஆட்சிக்கு வந்தால் வங்கமொழியை அழித்துவிடும்: மமதா எச்சரிக்கை
பாரதிய ஜனதா ஆட்சிக்கு வந்தால் மேற்கு வங்கத்தில் வங்க மொழி அழிந்துவிடும் என மமதா பானர்ஜி பேசியது குறித்து..
பாரதிய ஜனதா ஆட்சிக்கு வந்தால் மேற்கு வங்கத்தில் வங்க மொழி அழிந்துவிடும் என மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி இன்று (ஏப். 5) தெரிவித்தார்.
மேற்கு வங்கத்தில் அதிகாரிகள் மிரட்டப்பட்டு வருவதாகவும், வாக்காளர் பட்டியல் முறைகேடு நடந்துள்ளதாகவும் குற்றம் சாட்டினார்.
மக்களை அச்சப்படுத்துவதற்காக வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பட்டியலில் பெயர்கள் நீக்கப்படுவதாகவும், பாஜகவுக்கு துணிச்சல் இருந்தால் நேரடியாக மோதி வெற்றி பெற வேண்டும் எனவும் சுட்டிக்காட்டினார்.
Advertisement
மேற்கு வங்கத்திற்கு ஏப்ரல் 23 மற்றும் 29 என இரண்டு கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதனையொட்டி அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன.
அந்தவகையில் மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத் தொகுதியில் பிரசாரத்தின்போது முதல்வர் மமதா பானர்ஜி பேசியதாவது:
"மேற்கு வங்கத்தில் முர்ஷிதாபாத் தொகுதியில் மட்டும் 500 அதிகாரிகளின் பெயர்கள் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. அரசு இயந்திரத்தை முடக்கும் நோக்கத்தில் பாஜகவால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நீங்கள் ஒரு மாதத்திற்குப் பணிகளை நிறுத்திவைக்கலாம்; ஆனால் தேர்தல்களுக்குப் பிறகு அனைத்தும் மீண்டும் தொடங்கும்.வளர்ச்சித் திட்டங்கள் தொடர்ந்து நடைபெறும். எனது அரசாங்கம் அனைத்து மதங்களைச் சேர்ந்த மக்களுக்காகவும் உழைக்கிறது
ஃபராக்கா போன்ற பகுதிகளில் சிறுபான்மைச் சமூகங்களுக்கான சமுதாயக் கூடங்கள் அமைக்கும் பணிகள் சிறப்பாக முடிக்கப்பட்டுள்ளன. அனைத்துத் தரப்பு மக்களின் வளர்ச்சியை நோக்கமாகக் கொண்டு ஆட்சி செய்கிறேன். பிளவுபடுத்தும் அரசியலை ஆதரிப்பதில்லை.
திரிணமூல் காங்கிரஸ் மீண்டும் தேர்ந்தெடுக்கப்படாவிட்டால், மாநிலத்தில் வங்க மொழியும் வங்க இன அடையாளமும் ஆபத்திற்குள்ளாகும் என்று மமதா எச்சரித்தார்.