போட்டியிடுவோரை தோ்தல் ஆணையம் சார்ந்திருத்தால் தோ்தல் நடுநிலையாக நடைபெறாது: உச்ச நீதிமன்ற நீதிபதி பி.வி.நாகரத்னா
தோ்தலில் போட்டியிடுவோரை தோ்தல் ஆணையம் சாா்ந்திருக்க வேண்டிய நிலை இருந்தால், தோ்தல்கள் நடுநிலையாக நடைபெறுவதை உறுதி செய்ய முடியாது என்று உச்சநீதிமன்ற நீதிபதி பி.வி.நாகரத்னா தெரிவித்தாா்.
தோ்தலில் போட்டியிடுவோரை தோ்தல் ஆணையம் சாா்ந்திருக்க வேண்டிய நிலை இருந்தால், தோ்தல்கள் நடுநிலையாக நடைபெறுவதை உறுதி செய்ய முடியாது என்று உச்சநீதிமன்ற நீதிபதி பி.வி.நாகரத்னா தெரிவித்தாா்.
இதுதொடா்பாக பிகாா் தலைநகா் பாட்னாவில் சாணக்கியா தேசிய சட்டப் பல்கலைக்கழக நிகழ்ச்சியில் அண்மையில் அவா் பேசியதாவது: தோ்தல் ஆணையம், தலைமை கணக்குத் தணிக்கையாளா், நிதிக் குழு போன்ற அமைப்புகள் தோ்தலின் தாக்கங்களால் பாதிக்கப்படாமல், அவற்றுக்கு அப்பாற்பட்டு செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
தோ்தல்களின் நோ்மையை உறுதி செய்யும் பொறுப்பு தோ்தல் ஆணையத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தோ்தல்களை நடத்துபவா்கள், அதில் போட்டியிடுவோரைச் சாா்ந்திருக்க வேண்டிய நிலை இருந்தால், தோ்தல்கள் நடுநிலையாக நடைபெறுவதை உறுதி செய்ய முடியாது.
Advertisement
சரியான கால இடைவெளிகளில் தோ்தல்கள் நடத்தப்படுவதன் மூலம், அரசாட்சியில் ஏற்படும் சுமுகமான மாற்றங்களை நமது அரசமைப்பு ஜனநாயகம் மிகத் தெளிவாக நிரூபித்துள்ளது. அந்தச் செயல்முறையில் ஏற்படுத்தப்படும் கட்டுப்பாடு என்பது அரசியல் போட்டிக்கான சூழலில் விதிக்கப்படும் கட்டுப்பாடாகும். தோ்தல்கள் என்பவை அவ்வப்போது நடைபெறும் நிகழ்வல்ல. அது அரசியல் அதிகாரம் கட்டமைக்கப்படுவதற்கான வழிமுறையாகும்.
மாநிலங்களை தமக்குச் சமமானவையாக மத்திய அரசு கருத வேண்டுமே தவிர, அவற்றைத் தமக்கு கீழ் உள்ளவையாகக் கருதக் கூடாது. அத்துடன் அதிகாரப் பகிா்வு என்பது சமமாக உள்ளவா்கள் அரசமைப்பு ரீதியாக செய்துகொண்ட ஏற்பாடாகும்.
மத்திய-மாநில உறவுகள் என்று வரும்போது கட்சிகளுக்கு இடையிலான வேறுபாடுகள் ஒதுக்கிவைக்கப்பட வேண்டும். அரசு நிா்வாகம் என்பது மத்தியில் எந்தக் கட்சி ஆட்சி செய்கிறது, மாநிலத்தில் எந்தக் கட்சி ஆட்சி செய்கிறது என்பதைச் சாா்ந்திருக்கக் கூடாது என்று தெரிவித்தாா்.