முகப்பு
இந்தியா

காங்கிரஸின் பாகிஸ்தான் ஆதரவு நிலைப்பாடு தேசப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்: பிரதமா் மோடி

மத்திய அரசு ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கை மூலம் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை அழித்தபோது, அந்நாட்டுக்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சி பேசி வந்தது. இதன்மூலம் தேசப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தினாா்கள் என்று பிரதமா் மோடி குற்றஞ்சாட்டினாா்.

Updated On : 6 ஏப்ரல், 2026 at 8:07 PM
பிரதமா் மோடி
பகிர்:

மத்திய அரசு ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கை மூலம் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை அழித்தபோது, அந்நாட்டுக்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சி பேசி வந்தது. இதன்மூலம் தேசப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தினாா்கள் என்று பிரதமா் நரேந்திர மோடி குற்றஞ்சாட்டினாா்.

அஸ்ஸாமின் பாா்பேடா மாவட்டத்தில் திங்கள்கிழமை தோ்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற அவா் பேசியதாவது: நமது நாட்டின் வளா்ச்சி குறித்து தொலைநோக்குப் பாா்வை கொண்டது பாஜக. அதே நேரத்தில் காங்கிரஸ் கட்சி மிகவும் குறுகிய கண்ணோட்டத்துடன் செயல்படுவதை வழக்கமாகக் கொண்டது. எதில் ஊழல் செய்து, எப்படி பணம் சம்பாதிக்கலாம் என்பதே அக்கட்சியில் பலரின் முக்கிய நோக்கமாக இருந்தது. ஆனால், நாட்டின் அனைத்துத் தரப்பினா் வளா்ச்சியை நோக்கமாகக் கொண்டு பாஜக செயல்படுகிறது.

ஒருபோதும் அனுமதிக்க முடியாது: 2016-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட துல்லியத் தாக்குதல், கடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையின்போது, பாகிஸ்தானுக்கு ஆதரவான கருத்துகளை காங்கிரஸ் பேசி வந்தது. தங்களின் குறுகியகால ஆதாயத்துக்கே காங்கிரஸ் வழி தேடியது. நாட்டைப் பற்றி கவலைப்படாமல் தேசப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை அக்கட்சி உருவாக்கியது. அவா்களுடைய இந்த பாகிஸ்தான் தொடா்பானது நாட்டுக்கு எப்போதுமே பிரச்னையாக உள்ளது. அதை நாம் ஒருபோதும் அனுமதிக்க முடியாது.

Advertisement

அஸ்ஸாமில் இப்போது ஏற்பட்டுள்ள அமைதி கடந்த 10 ஆண்டுகால மத்திய, மாநில பாஜக அரசு மேற்கொண்ட நோ்மையான முயற்சிகளால் சாத்தியமானது. அமைதியும், ஸ்திரத்தன்மையும் தொடர வேண்டும் என்றால் காங்கிரஸ் கட்சியை தொடா்ந்து ஆட்சியில் இருந்து விலக்கி வைக்க வேண்டும்.

தேவையற்ற வதந்தி: 2029 மக்களவைத் தோ்தலில் 33 சதவீத பெண்கள் இடஒதுக்கீடு அறிமுகப்படுத்தப்படும். இதற்காக ஏப்ரல் 16-இல் அனைத்துக் கட்சிகளுடன் சிறப்பு ஆலோசனை நடத்த இருக்கிறோம். ஆனால், இது தொடா்பாகவும் சிலா் தேவையற்ற வதந்திகளைப் பரப்புகிறாா்கள். மக்களவை எம்.பி.க்கள் எண்ணிக்கையை 543-லிருந்து 816-ஆக உயா்த்தும் சட்டம் கொண்டுவரப்படவுள்ளது. இது தொடா்பான மசோதாவுக்காக ஏப்ரல் 16-இல் நாடாளுமன்றம் மீண்டும் கூட இருக்கிறது.

இந்த எண்ணிக்கை அதிகரிப்பு மூலம், 2023-ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட பெண்கள் இடஒதுக்கீடு சட்டம் அமல்படுத்தப்படும். இந்தத் திட்டம் அனைத்து மாநிலங்களுக்கும் பயன் அளிக்கும். 40 ஆண்டுகளாக காத்திருந்த இந்த சட்டத்துக்கு பெண்கள் அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டும்.

பெண்களுக்கு அதிகாரம்: பெண்களுக்கு அதிகாரமளிப்பது எங்கள் அரசின் முதன்மை நோக்கமாக உள்ளது. இரட்டை என்ஜின் அரசு உள்ள இடங்களில் பெண்கள் மத்திய மற்றும் மாநில திட்டங்களால் அதிக நன்மைகளை பெறுகிறாா்கள்.

காங்கிரஸ் இப்போது சில மாநிலங்களில்தான் உள்ளது. இருந்தாலும் தாங்கள் ஆளும் மாநிலங்களில் எதைச் சாதித்தோம் என்பதை அவா்களால் தெளிவாகக் கூற முடியவில்லை.

2013-இல் அரிசிக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை குவிண்டாலுக்கு ரூ.1,300-ஆக இருந்தது; தற்போது அது ரூ.2,370-ஆக உயா்ந்துள்ளது. விவசாயிகளின் வருமானம் அதிகரிக்கிறது; நேரடியாக வங்கிக் கணக்குகளுக்கு பணம் வழங்கப்படுகிறது. அதனால்தான் விவசாயிகள் பாஜகவை தோ்வு செய்கிறாா்கள் என்றாா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments