மேற்காசிய போரால் இந்திய விமான நிறுவனங்கள் பாதிப்பு: 10,000 சர்வதேச விமானங்கள் ரத்து!
மேற்காசிய போரின் தாக்கம்: இந்தியாவில் 10,000 சர்வதேச விமானங்கள் ரத்து!
புது தில்லி : மேற்காசிய பதற்றம் எதிரொலியாக கடந்த பிப். 28 தொடங்கி இதுவரை இந்திய விமான நிறுவனங்களால் இயக்கப்படும் 10,000-க்கும் மேற்பட்ட சர்வதேச விமானங்கள் ரத்து செய்யப்பட்டிருப்பதாக மத்திய அரசு தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டது.
இஸ்ரேல், ஜோர்டான், லெபனான், குவைத், கத்தார், பஹ்ரைன், ஐக்கிய அரபு அமீரகம் உள்பட மேற்காசியவெங்கிலும் இந்தப் போரின் தாக்கம் காரணமாக வான்வெளி மூடப்பட்டுள்ளது. பகுதியளவில் வான்வெளி பயன்பாடு அனுமதிக்கப்பட்டுள்ள போதிலும், விமானப் போக்குவரத்து மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இது குறித்து, சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சக இணைச் செயலரான அசாங்க்பா சூபா வோ செய்தியாளர்களுடன் பேசுகையில், “சராசரியாக ஒவ்வொரு நாளும், மத்திய கிழக்கு பிராந்தியத்துக்கு இந்திய விமான நிறுவனங்கள் ஏறத்தாழ 300 முதல் 350 விமானங்களை இயக்கி வந்தன (புறப்பாடு மற்றும் வருகை உள்ளடக்கம்).
Advertisement
அந்த எண்ணிக்கை இப்போது 80 - 90 அளவுக்கு குறைந்துவிட்டது. இதன்மூலம், கடந்த பிப். 28-முதல் இந்திய விமான நிறுவனங்களால் ரத்து செய்யப்பட்ட விமானங்களின் மொத்த எண்ணிக்கை பத்தாயிரத்தைக் கடந்துவிட்டது.
மேற்காசிய நிலவரம் உலகளாவிய விமானப் போக்குவரத்துக்கும் சர்வதேச தொடர்புக்கும் சீர்குலைவை விளைவித்துள்ளது. வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பா பகுதிகளுக்கு இயக்கப்படும் இந்திய விமானங்கள் இப்போது நெடுந்தூர வழித்தடங்களைப் பயன்படுத்திச் செல்ல வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளன. இதனால் பயண நேரமும் அது சார்ந்த கட்டணமும் அதிகரித்திக்கிறது” என்றார்.
விமான எரிபொருள் விலையேற்றம் கண்டாலும் அதனால் உள்நாட்டு விமான கட்டணத்தில் பெரும் தாக்கம் ஏற்படாத விதத்தில் அரசு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.