பாரபட்சமற்ற தேர்தல் வேண்டும்: தேர்தல் ஆணையத்துக்கு திரிணமூல் காங்கிரஸ் கண்டனம்
மேற்கு வங்கத்தில் தேர்தல் மத்திய அரசின் தலையீடு மற்றும் பாரபட்சமின்றி நடத்தப்பட வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு திரிணமூல் காங்கிரஸ் கண்டனம்
மேற்கு வங்கத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் மத்திய அரசின் தலையீடு மற்றும் பாரபட்சமின்றி நடத்தப்பட வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு திரிணமூல் காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.
மேற்கு வங்கத்தில் சட்டப்பேரவைக்கான தேர்தல் ஏப்ரல் 23, 29 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. இந்த நிலையில், மாநிலத்தில் தேர்தல் மத்திய அரசின் தலையீடு இன்றி நடத்தப்பட வேண்டும் என்று ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கூறியுள்ளது.
இதுகுறித்து, திரிணமூல் காங்கிரஸின் சமூக ஊடகப் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, "மாநிலத்தில் தேர்தல் செயல்முறை சுதந்திரமாகவும் நியாயமானதாகவும் இருக்க வேண்டும்.
Advertisement
தேர்தல், தில்லியின் கட்டுப்பாட்டிலிருந்து விடுபட்டதாக, அரசியல் சார்பற்ற, பாரபட்சமின்றி, இரட்டை நிலைப்பாடுகளிலிருந்தும் விடுபட்டதாக இருக்க வேண்டும்" என்று கூறியுள்ளது.
முன்னதாக, மேற்கு வங்கத்தில் அதிகாரிகள் மாற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, தலைமைத் தேர்தல் ஆணையரை திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.க்கள் சந்தித்தனர். ஆனால், வெறும் 7 நிமிடங்களேயான இந்தச் சந்திப்பின்போது, திரிணமூல் காங்கிரஸுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக தேர்தல் ஆணையம் வெளிப்படையாகக் கூறியது.
இதனைத் தொடர்ந்து, தேர்தல் ஆணையத்தின் இந்த செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்த ஆம் ஆத்மி தலைமை ஒருங்கிணைப்பாளரான அரவிந்த் கேஜரிவால், "தேர்தல் ஆணையம், பாஜகவின்கீழ் செயல்படுவதும், பாஜகவிடமிருந்தே நேரடி உத்தரவுகளைப் பெறுவதையும் இப்போது சொல்ல வேண்டிய அவசியமில்லை. இது இப்போது மிகத் தெளிவாக வெளிப்படையாகவே தெரிந்து விட்டது.
இது மிகவும் துரதிருஷ்டவசமானது. குறைந்தபட்சம், இதுபோன்ற மொழியில் ட்வீட் செய்வதன் மூலம், இவ்வளவு முக்கியமான ஒரு கட்சியின் நற்பெயரை பகிரங்கமாக களங்கப்படுத்தாதீர்கள்" என்று கூறினார்.
294 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட மேற்குவங்கத்தில், 152 தொகுதிகளுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு ஏப். 23 ஆம் தேதியும் 142 தொகுதிகளுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு ஏப். 29 ஆம் தேதியும் நடைபெற உள்ளது. தொடர்ந்து, மே 4-ல் வாக்கு எண்ணிக்கையும் நடைபெறுகிறது.