திருச்சூரில் வாக்களித்த முதியவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு!
வாக்களிக்க வந்த முதியவர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலத்தின் திருச்சூர் அருகே உள்ள வாணியம்பாறையில் வாக்களிக்க வந்த முதியவர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரளத்தில் 140 தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு காலை 7 மணி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அரசியல் கட்சித் தலைவர்களும் வரிசையில் காத்திருந்து வாக்கு செலுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், ராமஞ்சிறையைச் சேர்ந்த வினோதன் 62 வாக்களித்த நிலையில், அங்கேயே உயிரிழந்துள்ளார்.
Advertisement
காவல்துறையின் தகவலின்படி, வினோதன் தனது வாக்கைச் செலுத்துவதற்காக வாணியம்பாறையில் உள்ள இகேஎம் மேல்நிலைப் பள்ளிக்கு வந்திருந்தார். சுமார் ஒரு மணி நேரம் வரிசையில் நின்ற பிறகு, அவர் தனது ஜனநாயகக் கடமையான வாக்களிக்கும் உரிமையை நிறைவேற்றினார்.
வாக்குச்சாவடியிலிருந்து வெளியே வந்து கொண்டிருந்தபோது, காலை சுமார் 10.45 மணியளவில் அவர் திடீரென மயங்கி விழுந்ததாகக் காவல்துறையினர் கூறினர்.
அருகிலிருந்தவர்கள் விரைந்து வந்து அவரை நாற்காலியில் அமரவைக்க முயன்ற போது அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்துள்ளது. சம்பவ இடத்துக்கு ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.அவர் அங்கு உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு, விசாரணை தொடங்கப்படும் என காவல்துறையினர் தெரிவித்தனர்.