எரிவாயு தட்டுப்பாடு? கத்தார் செல்கிறார் மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி!
மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி கத்தார் பயணம் மேற்கொள்வது பற்றி...
இஸ்ரேல் - ஈரான் இடையேயான போரால் இந்தியாவில் எரிசக்தி நெருக்கடியை சமாளிக்க மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி இரண்டு நாள் பயணமாக இன்று கத்தார் செல்கிறார்.
அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் நாடுகளிடையே கடந்த பிப்ரவரி முதல் போர் நடைபெற்றுவந்த நிலையில் இரு வாரங்களுக்கு நிறுத்தப்பட்டுள்ளது.
அமெரிக்காவும், ஈரானும் இரு வார காலத்துக்கு போா் நிறுத்தம் செய்வதாக நேற்று(புதன்கிழமை) அறிவித்தன. இஸ்ரேலும் இந்தப் போா் நிறுத்தத்துக்கு ஆதரவு தெரிவித்து தாக்குதலை நிறுத்துவதாக அறிவித்தது.
Advertisement
இதையடுத்து, மேற்காசியாவில் சுமாா் ஒரு மாதத்துக்கும் மேலாக நிலவிய பதற்றம் தணிந்துள்ளது.
முன்னதாக இஸ்ரேல் - ஈரான் இடையேயான போரால் ஈரான் வசமுள்ள ஹோர்முஸ் நீரிணை வழியாக கச்சா எண்ணெய் போக்குவரத்துக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் சமையல் எரிவாயு, பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டது.
தற்போது போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டாலும் ஹோர்முஸ் நீரிணை வழியாக செல்லும் கப்பல்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படும் என்று ஈரான் கூறியுள்ளது.
இந்த சூழ்நிலையில்தான் மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி இரண்டு நாள்(ஏப். 9 - 10) பயணமாக இன்று கத்தார் செல்கிறார்.
ஹோர்முஸ் நீரிணை தற்போது ஈரான் வசம் உள்ளதால் இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு கச்சா எண்ணெய் பெறுவதில் சிக்கல் நீடிப்பதால் இதுதொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த அமைச்சர் கத்தார் செல்வதாகக் கூறப்படுகிறது.
ஏனெனில் போர் நிறுத்தத்தால் இயற்கை எரிவாயு உற்பத்தியை கத்தார் மீண்டும் தொடங்கியுள்ளது. ஈரான் போரால் தாக்குதலுக்கு உள்ளான வளைகுடா நாடுகளில் கத்தாரும் ஒன்று.
அதேபோல மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஏப். 11, 12 தேதிகளில் ஐக்கிய அரபு அமீரகம் செல்கிறார். போர் நிறுத்தத்தையடுத்து அமைச்சர் ஜெய்சங்கர், ஐக்கிய அரபு அமீரகம் செல்வதால் இதுவும் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.