அமைதிப்பேச்சு! கத்தார் மன்னரை நேரில் சந்தித்த பாக். பிரதமர்!
கத்தார் மன்னரை பாகிஸ்தான் பிரதமர் நேரில் சந்தித்துள்ளது குறித்து...
கத்தார் நாட்டுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷரீஃப் அந்நாட்டு மன்னர் தமீம் பின் ஹமாத் அல் தானியை நேரில் சந்தித்து உரையாடியுள்ளார்.
பாகிஸ்தான் அரசின் தலைமையில், பிரதமர் ஷரீஃப் முன்னிலையில் இஸ்லாமாபாதில் நடைபெற்ற ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தன.
இதனைத் தொடர்ந்து, இந்தப் போர்நிறுத்த மத்தியஸ்தம் நடவடிக்கைகளுக்கு இடையே பாகிஸ்தான் பிரதமர் ஷரீஃப் கடந்த புதன்கிழமை (ஏப். 15) அன்று சௌதி அரேபியா, கத்தார் மற்றும் துருக்கி ஆகிய நாடுகளுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
Advertisement
இந்த நிலையில், கத்தார் சென்றுள்ள பிரதமர் ஷாபாஸ் ஷரீஃப், மன்னர் தமீமை வியாழக்கிழமை நேரில் சந்தித்து உரையாடியுள்ளார். மேலும், கத்தாரின் வான்வழிக்குள் பிரதமர் ஷாபாஸின் விமானம் நுழைந்தவுடன் கத்தாரின் போர் விமானங்கள் மூலம் வரவேற்பு அளிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய படைகளின் தாக்குதல்களுக்குப் பதிலடியாக கத்தார் உள்ளிட்ட வளைகுடா நாடுகளின் முக்கிய கட்டமைப்புகள் மீது ஈரானின் படைகள் தாக்குதல் நடத்தின. இதில், கத்தாரின் முக்கிய எரிபொருள் கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, மீண்டும் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் மற்றும் ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி தலைமையில் 2 ஆம் கட்ட பேச்சுவார்த்தைகள் விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே, அரசு முறைப் பயணமாக ஈரானின் தலைநகர் தெஹ்ரானுக்குச் சென்றுள்ள பாகிஸ்தானின் ராணுவத் தலைமைத் தளபதி ஆசிம் முனீர் அந்நாட்டின் அமைச்சர் அராக்சி உள்ளிட்ட முக்கிய தலைவர்களைச் சந்தித்து உரையாடியது குறிப்பிடத்தக்கது.