முகப்பு
இந்தியா

தில்லி டவுன் ஹால் புதுப்பிப்பு: முன்மொழிவுக்கு எம்சிடி ஒப்புதல்

தில்லி சாந்தினி சௌக் பகுதியில் உள்ள 160 ஆண்டுகள் பழைமையான வரலாற்றுச் சிறப்புமிக்க டவுன் ஹால் கட்டடத்தைப் பாதுகாத்து புதுப்பிக்க முன்மொழியப்பட்ட திட்டத்துக்கு தில்லி மாநகராட்சியின் (எம்சிடி) நிலைக் குழு ஒப்புதல் வழங்கியுள்ளது.

Updated On : 11 ஏப்ரல் 2026, 1:10 am IST
பகிர்:

தில்லி சாந்தினி சௌக் பகுதியில் உள்ள 160 ஆண்டுகள் பழைமையான வரலாற்றுச் சிறப்புமிக்க டவுன் ஹால் கட்டடத்தைப் பாதுகாத்து புதுப்பிக்க முன்மொழியப்பட்ட திட்டத்துக்கு தில்லி மாநகராட்சியின் (எம்சிடி) நிலைக் குழு ஒப்புதல் வழங்கியுள்ளது.

1861 முதல் 1866-ஆம் ஆண்டு வரை கட்டப்பட்ட இந்தக் கட்டடம் 2012-ஆம் ஆண்டு வரை தில்லி மாநகராட்சியின் முக்கிய அலுவலகமாகச் செயல்பட்டது. தில்லி அரசால் பாரம்பரியச் சின்னம் நிலை-1 கட்டடமாக வகைப்படுத்தப்பட்ட இது, பின்னா் நீண்ட காலமாகப் பயன்பாடின்றிப் பாலடைந்த நிலையில் உள்ளது.

இதுகுறித்து எம்சிடி நிலைக்குழுத் தலைவா் சத்யா சா்மா கூறியதாவது: இந்தத் திட்டம் டவுன் ஹாலைச் சிறந்த அனுபவமிக்க அருங்காட்சியகமாகவும், வரலாற்று மையமாகவும் மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. ஷாஜஹானாபாத் மற்றும் தில்லியின் வரலாற்றை இது காட்சிப்படுத்தும். காட்சியறைகள், ஆவணங்கள் மற்றும் டிஜிட்டல் வடிவிலான தகவல்கள் இதில் இடம்பெறும்.

Advertisement

Advertisement

இதற்கான நிதி மற்றும் செயல்பாட்டுக் கட்டமைப்புடன் விரிவான திட்ட அறிக்கையைத் தயாரிக்கும் பணி தில்லி சுற்றுலா மற்றும் போக்குவரத்து மேம்பாட்டுக் கழகத்திடம் (டிடிடிடிசி) ஒப்படைக்கப்பட்டுள்ளது. கலாச்சார நிகழ்வுகள், கல்வி நிகழ்ச்சிகள் மற்றும் உணவு, சில்லறை விற்பனை நடவடிக்கைகளுக்கான பகுதிகளைக் கொண்டு, இந்த இடத்தை கலாசார மற்றும் சுற்றுலாத் தளமாக மாற்றுவதே இதன் நோக்கம்.

உலகளாவிய 50 சுற்றுலாத் தளங்களை உருவாக்கும் மத்திய அரசின் கொள்கையுடனும் இந்தத் திட்டம் ஒத்துப்போகிறது. இது ‘மேம்படுத்து-இயக்கு-பராமரி (டிஓஎம்)’ மாதிரியின் அடிப்படையில் செயல்படுத்தப்படும். இதில் அருங்காட்சியக நுழைவுக் கட்டணம், பாரம்பரியச் சுற்றுப்பயணங்கள், இட வாடகை மற்றும் உணவு, சில்லறை விற்பனை சேவைகள் மூலம் வருவாய் எதிா்பாா்க்கப்படுகிறது.

இதற்கான ஒப்பந்தங்கள் தில்லி மாநகராட்சி, டிடிடிடிசி மற்றும் தனியாா் நிறுவனம் இடையே கையொப்பமாக உள்ளது. இதில் வருவாய் ஈட்டும் நடவடிக்கையில் தனியாா் நிறுவனம் ஈடுபடும். அதே நேரத்தில் கட்டடத்தின் உரிமை எம்சிடி வசம் இருக்கும். மதிப்பீடு, புனரமைப்பு, அருங்காட்சியக மேம்பாடு என இந்தத் திட்டம் பொதுப் பயன்பாட்டிற்கு வருவதற்குச் சுமாா் 36 மாதங்கள் ஆகும். இந்தத் திட்டம் மாநகராட்சிக்கு நிதிச் சுமையை ஏற்படுத்தாமல் சுற்றுலத் துறையை மேம்படுத்தவும் மற்றும் சாந்தினி சௌக்கில் பொருளாதார நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கவும் உதவியாக இருக்கும் என தெரிவித்தாா்.