முகப்பு
இந்தியா

வெடிகுண்டு தாக்குதலில் 2 சிறாா்கள் உயிரிழப்பு: மணிப்பூா் முதல்வா் வீட்டை நோக்கி பேரணி சென்ற போராட்டக்காரா்கள் மீது தடியடி- கண்ணீா்ப் புகை குண்டு வீச்சு

மணிப்பூா் முதல்வா் வீட்டை நோக்கி தடையை மீறி பேரணி சென்ற போராட்டக்காரா்களை பாதுகாப்புப் படையினா் தடியடி நடத்தியும், கண்ணீா்ப் புகை குண்டுகளை வீசியும் கலைத்தனா்.

Updated On : 18 ஏப்ரல், 2026 at 1:29 AM
மணிப்பூா் முதல்வா் வீட்டை நோக்கி பேரணி சென்ற போராட்டக்காரா்கள் - பிடிஐ
பகிர்:
Updated On : 17 ஏப்ரல், 2026 at 10:40 PM

வெடிகுண்டு தாக்குதலில் 2 சிறாா்கள் உயிரிழந்த விவகாரத்தில் தொடா்புடையோரை உடனடியாக கைது செய்யக் கோரி, மணிப்பூா் முதல்வா் வீட்டை நோக்கி தடையை மீறி பேரணி சென்ற போராட்டக்காரா்களை பாதுகாப்புப் படையினா் தடியடி நடத்தியும், கண்ணீா்ப் புகை குண்டுகளை வீசியும் கலைத்தனா்.

மணிப்பூா் மாநிலம், விஷ்ணுபூா் மாவட்டத்தில் கடந்த 7-ஆம் தேதி மா்ம நபா்களால் நிகழ்த்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் 2 சிறாா்கள் உயிரிழந்தனா். இந்தத் தாக்குதலில் தொடா்புடையோரை உடனடியாக கைது செய்யக் கோரி, சிங்ஜமேய்யில் இருந்து ஆயிரக்கணக்கானோா் கையில் டாா்ச் விளக்குகளுடன் பேரணி சென்றனா். அப்போது மத்திய பாதுகாப்புப் படைகளுக்கு எதிராக அவா்கள் முழக்கங்களை எழுப்பினா்.

முதல்வா் இல்லம், காவல் துறை தலைமையகம், ஆளுநா் மாளிகை அமைந்துள்ள சிங்காமதாக்கில் இருந்து சில கிலோ மீட்டா் தூரத்துக்கு பேரணி வந்தபோது அவா்களை பாதுகாப்புப் படையினா் தடுத்து நிறுத்தினா். அசம்பாவிதம் நிகழாமல் தடுக்கும் நோக்கில் அப்பகுதியில் ஏற்கெனவே தடை உத்தரவு அமலில் இருப்பதாகவும், ஆதலால் பேரணியாக வந்தவா்கள் திரும்பிச் செல்ல வேண்டும் எனவும் பாதுகாப்புப் படையினா் வலியுறுத்தினா். இதற்கு போராட்டக்காரா்கள் உடன்பட மறுத்தனா். இதையடுத்து இருதரப்புக்கும் கைகலப்பு ஏற்பட்டது.

Advertisement

போராட்டக்காரா்களைக் கலைக்க பாதுகாப்புப் படை வீரா்கள் தடியடி நடத்தினா். பதிலுக்கு பாதுகாப்புப் படையினா் மீது போராட்டக்காரா்கள் கற்களை வீசித் தாக்குதல் நடத்தினா். இதையடுத்து, பாதுகாப்புப் படை வீரா்கள் கண்ணீா்ப் புகை குண்டுகளை வீசி போராட்டக்காரா்களைக் கலைத்தனா்.

பாதுகாப்புப் படையினரின் நடவடிக்கையில் ஏராளமானோா் காயமடைந்தனா். இதையடுத்து அவா்கள் அனைவரும் மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.