மணிப்பூர் வெடிகுண்டு தாக்குதல்! குற்றவாளிகளைக் கைது செய்யக்கோரி கண்டன பேரணி!
மணிப்பூரில் நடந்த வெடிகுண்டு தாக்குதலைக் கண்டித்து மக்கள் பேரணி நடத்தியது குறித்து...
மணிப்பூரில் நடந்த வெடிகுண்டு தாக்குதலைக் கண்டித்து, மக்கள் கண்டன பேரணிகளை வியாழக்கிழமை (ஏப்.9) நடத்தியுள்ளனர்.
மணிப்பூர், விஷ்ணுபூர் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை (ஏப்.7) அதிகாலை பொதுமக்களின் குடியிருப்புப் பகுதியில் பயங்கரவாதிகள் குண்டுவீசியதில் இரண்டு குழந்தைகள் பலியானதோடு அவர்களுடைய தாய் படுகாயம் அடைந்தார்.
சம்பவம் நடந்த சிறிது நேரத்திலேயே கெல்மோல் அருகே அமைந்திருந்த மத்திய ரிசர்வ் காவல் படை (சி.ஆர்.பி.எஃப்.) முகாமுக்குள் சுமார் 500 போராட்டக்காரர்கள் கொண்ட கும்பல் புகுந்து, பாதுகாப்பு வாகனங்களைச் சேதப்படுத்தியும் எரித்தும் வன்முறையில் ஈடுபட்டனர்.
Advertisement
அப்போது, பாதுகாப்புப் படையினா் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் மூன்று பேர் பலியாகினர். மேலும் 30 பேர் காயமடைந்தனர். இந்தச் சம்பவங்களால் மாநிலத்தில் மீண்டும் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.
இதனால், மணிப்பூரின் 5 மாவட்டங்களில் 3 நாள்களுக்கு இணைய சேவையை அந்த மாநில அரசு முடக்கியுள்ளது. மேலும், சம்பவம் நடந்த விஷ்ணுபூரில் ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த வெடிகுண்டு தாக்குதலைக் கண்டித்து மணிப்பூரில் பல மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் ஊரடங்கு உத்தரவையும் மீறி கண்டன பேரணிகளை நடத்தியும், டயர்களை எரித்தும் தங்கள் எதிர்ப்புகளைத் தெரிவித்தனர்.
முன்னதாக, இந்தச் சம்பவத்தை அடுத்து நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கையின்போது, ஆயுதமேந்திய குகி பயங்கரவாதிகள் மூன்று பேரை காவல்துறை கைது செய்தது. இருப்பினும், கைது செய்யப்பட்டவர்களுக்கு அந்த குண்டுவெடிப்புடன் நேரடித் தொடர்பு உள்ளதா என்பதை காவல் துறை இன்னும் உறுதிப்படுத்தவில்லை.