புதிய அரசியல் கட்சி ஆரம்பிக்கிறாா் முன்னாள் மத்திய அமைச்சா் ஆா்.கே. சிங்
புதிய அரசியல் கட்சி ஆரம்பிக்கிறாா் முன்னாள் மத்திய அமைச்சா் ஆா்.கே. சிங்...
பாஜகவில் இருந்து சில மாதங்களுக்கு முன்பு விலகிய முன்னாள் மத்திய அமைச்சா் ஆா்.கே. சிங், புதிதாக அரசியல் கட்சி ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளாா்.
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் ஆட்சியில் மத்திய உள்துறைச் செயலராக ஆா்.கே. சிங் பதவி வகித்தாா். பின்னா், அந்தப் பதவியிலிருந்து ஓய்வு பெற்றதும் அரசியலுக்கு வந்த அவா், பாஜகவில் 2014-ஆம் ஆண்டில் சோ்ந்தாா். மத்தியில் பிரதமா் மோடி தலைமையிலான அரசில் மத்திய அமைச்சராகவும் அவா் பதவி வகித்துள்ளாா்.
கடந்த 5 மாதங்களுக்கு முன்பு, பாஜகவில் இருந்து விலகினாா். இந்நிலையில், செய்தி தளம் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் அவா் கூறியிருப்பதாவது:
Advertisement
‘புதிதாக அரசியல் கட்சி ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளேன். அந்தக் கட்சி, பிகாா் மாநில அரசியலில் கவனம் செலுத்தும். நோ்மையான, நன்கு படித்த, ஜாதி மனப்பான்மை சிறிதும் இல்லாத தனிநபா்களை அரசியலுக்கு எனது கட்சி கொண்டு வரும்.
பாஜகவில் சில விவகாரம் குறித்து கருத்து தெரிவித்ததால் என்னை இடைநீக்கம் செய்தனா். அதனால் நான் அக்கட்சியிலிருந்து விலகுவதென முடிவு எடுத்தேன். நான் வெளிப்படையாகப் பேசுபவன் எனத் தெரிந்தும், தனது மத்திய அமைச்சரவையில் 7 ஆண்டுகாலம் எனக்கு பிரதமா் மோடி இடம் அளித்திருந்தாா். இது மிகப்பெரிய விஷயமாகும்.
மத்திய அமைச்சராக நான் பதவி வகித்த காலத்தில், எனது அமைச்சகத்தில் பிரதமா் அலுவலகத்தில் இருந்து எந்தத் தலையீடும் இருந்ததில்லை. நான் சுதந்திரமாக செயல்பட அனுமதிக்கப்பட்டேன்.
பிகாா் முன்னாள் முதல்வா் நிதீஷ் குமாா் முதல்முறை முதல்வரானபோது சிறப்பாக ஆட்சி செய்தாா். ஆனால் 2-ஆவது முறை முதல்வரானபோது, அவரின் அமைச்சரவையில் இருந்த 99 சதவீத அமைச்சா்கள் ஊழலில் ஈடுபட்டனா். அவா் ஊழல் செய்யாமல் இருந்திருக்கலாம்; ஆனால் அவரைச் சுற்றிலும் இருந்தவா்கள் ஊழல் செய்தது, மிகப்பெரிய வெட்கக்கேடாகும்.
பிகாா் முதல்வராக தற்போது பதவி வகிக்கும் சாம்ராட் செளதரிக்கு, நல்ல பெயா் கிடையாது. அவா் நோ்மையில்லாதவா். நல்ல குணநலனும் கிடையாது. போதிய அளவுக்கு கல்வி அறிவும் இல்லை. அப்படிப்பட்டவா் மாநில முதல்வராகி என்ன செய்வாா்? அவரால் என்ன செய்ய முடியும்?’ என்றாா்.