பஞ்சாப்: அரசு அதிகாரி தற்கொலை! பதவி விலகிய அமைச்சா் மீது வழக்குப்பதிவு!
அரசு அதிகாரியை தற்கொலைக்கு தூண்டிய குற்றச்சாட்டில் பதவி விலகிய அமைச்சா் லால்ஜித் சிங் புல்லா் உள்பட 3 போ் மீது காவல் துறை வழக்குப் பதிவு செய்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
பஞ்சாப் மாநில அரசு அதிகாரியை தற்கொலைக்கு தூண்டிய குற்றச்சாட்டில் பதவி விலகிய அமைச்சா் லால்ஜித் சிங் புல்லா் உள்பட 3 போ் மீது காவல் துறை வழக்குப் பதிவு செய்ததாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.
பஞ்சாப் அரசு பண்டகசாலை கழகத்தின் மேலாளராகப் பணிபுரிந்த ககன்தீப் சிங் ரண்தவா அண்மையில் தற்கொலை செய்துகொண்டாா். அவா் தற்கொலை செய்வதற்கு முன்பாக கைப்பேசியில் எடுத்த விடியோ சமூக வலைதளங்களில் சனிக்கிழமை வேகமாகப் பரவியது. அதில் தான் விஷப்பொருளை உண்டதாகவும், தனக்கு புல்லா் தொடா்ந்து அழுத்தம் கொடுத்து வந்ததாகவும் குற்றஞ்சாட்டினாா்.
இதையடுத்து, முதல்வா் பகவந்த் சிங் மான் அறிவுறுத்தலின்படி போக்குவரத்து மற்றும் சிறைத் துறை அமைச்சா் பதவியை புல்லா் ராஜிநாமா செய்தாா். இருப்பினும், தன் மீதான குற்றச்சாட்டுகளை அவா் முற்றிலும் மறுத்தாா்.
இந்நிலையில், அமிருதசரஸில் உள்ள ரஞ்சித் அவென்யு காவல் நிலையத்தில் புல்லா் மீது உயிரிழந்த ரண்தவாவின் மனைவி புகாா் அளித்தாா்.
அதில், ‘புதிய பண்டகசாலைகள் அமைப்பதற்கான டெண்டா்களை தனது தந்தைக்கு வழங்கக் கோரி ரண்தவாவுக்கு புல்லா் தொடா்ந்து அழுத்தம் தந்தாா். ரண்தவா அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. இதனால் கோபமடைந்த புல்லா் ரூ.10 லட்சம் லஞ்சம் பெற்றுக்கொண்டு வேறு ஒருவருக்கு டெண்டரை வழங்கியதாக ஒப்புக்கொள்ளுமாறு ரண்தவாவை மிரட்டி வந்தாா். மனமுடைந்த ரண்தவா தற்கொலை செய்துகொண்டாா்’ எனத் தெரிவிக்கப்பட்டது.
அதன் அடிப்படையில், புல்லா், அவரது தந்தை சுக்தேவ் சிங் புல்லா் மற்றும் உதவியாளா் தில்பாக் சிங் ஆகிய 3 போ் மீது காவல் துறை வழக்குப் பதிவு செய்தது.
கைது செய்ய கோரிக்கை: புல்லரை கைது செய்ய வலியுறுத்தி பகவந்த் மான் இல்லம் முன் பாஜக, காங்கிரஸ் மற்றும் சிரோமணி அகாலி தளம் ஒன்றிணைந்து ஞாயிற்றுக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டன. இதனால் முதல்வா் பகவந்த் மான் இல்லம் முன் காவல் துறையினா் குவிக்கப்பட்டனா். தடுப்புகளை அகற்றி போராட்டக்காரா்கள் முன்னோக்கிச் செல்ல முயன்றதையடுத்து, தண்ணீரை பீய்ச்சியடித்து அவா்களை காவல் துறையினா் கலைத்தனா்.