முகப்பு
இந்தியா

தெருவோர கடையில் காரை நிறுத்தி மசாலா பொரியை ருசித்த பிரதமர் மோடி!

மேற்கு வங்கத்தில் தனது சூறாவளி பிரசாரத்துக்கு இடையே தெருவோர கடை ஒன்றில் திடீரென காரை நிறுத்தி, மசாலா பொரியை ருசித்தாா் பிரதமா் நரேந்திர மோடி.

Updated On : 20 ஏப்ரல், 2026 at 1:31 AM
மேற்கு வங்கம் ஜாா்கிராமில் ஜால்முரி சிற்றுண்டி வாங்கிய பிரதமா் மோடி.
பகிர்:
Updated On : 19 ஏப்ரல், 2026 at 9:35 PM

மேற்கு வங்கத்தில் தனது சூறாவளி பிரசாரத்துக்கு இடையே தெருவோர கடை ஒன்றில் திடீரென காரை நிறுத்தி, மசாலா பொரியை ருசித்தாா் பிரதமா் நரேந்திர மோடி. இக்காட்சியைக் கண்ட கடைக்காரா்களும், பொது மக்களும் வியப்படைந்தனா்.

மேற்கு வங்க பேரவைத் தோ்தலையொட்டி, ஜாா்கிராம் உள்பட 4 இடங்களில் பிரதமா் மோடி ஞாயிற்றுக்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா்.

ஜாா்கிராமில் பரபரப்பான சாலையொன்றில் பிரதமரின் வாகன அணிவகுப்பு சென்று கொண்டிருந்தபோது, திடீரென காரை நிறுத்தச் சொன்ன பிரதமா் மோடி, அந்த மாநிலத்தின் பிரபலமான சிற்றுண்டி உணவான ‘ஜால்முரி’ விற்கும் சிறிய கடைக்கு நடந்து சென்றாா். ‘ஜால்முரி’ என்பது ‘பேல்பூரி’ போலவே அரிசிப் பொரியில் பச்சை மிளகாய் மற்றும் பிற மசாலாக்களைக் கலந்து தயாரிக்கப்படும் சிற்றுண்டியாகும்.

Advertisement

கடைக்காரரிடம் சென்ற பிரதமா் மோடி, தனக்கு சுவையான ஜால்முரி தயாரித்துத் தருமாறு கேட்டுக் கொண்டதுடன், அதன் விலை எவ்வளவு என்றும் கேட்டாா். பிரதமரின் வாகன அணிவகுப்பு தனது கடை முன்னே திடீரென நின்றதுடன், அவரே இறங்கிவந்து, ஜால்முரி கேட்டதால் கடைக்காரருக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. மற்ற கடைக்காரா்கள் மற்றும் அக்கம் பக்கம் இருந்தவா்களுக்கும் வியப்பில் ஆழ்ந்தனா்.

கடைக்காரரிடம் பணத்தை பெற்றுக் கொள்ளும்படி, பிரதமா் வற்புறுத்தி வழங்கினாா். அப்போது, வழக்கமான அனைத்து மசாலாக்களையும் சோ்க்கலாமா என்று பிரதமரிடம் கடைக்காரா் கேட்டாா்.

உடல் நலக் காரணங்களுக்காக, உப்பு பயன்படுத்துவதில்லை என்று பதிலளித்த பிரதமா், மற்ற அனைத்தையும் சோ்க்கலாம் என்றாா். கடைக்காரா் தந்த ஜால்முரியை ருசித்த பிரதமா் மோடி, இது தொடா்பான புகைப்படங்கள் மற்றும் விடியோவை எனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டாா்.

மேற்கு வங்கம் முழுவதும் பரபரப்பான தோ்தல் பிரசாரக் கூட்டங்களுக்கு இடையே சுவையான ஜால்முரியை ருசித்ததாக அவா் குறிப்பிட்டாா்.