மகளிர் இடஒதுக்கீடு மசோதா தோல்வி! பாஜகவும் மோடியும் பெண்களுக்கு எதிரானவர்கள்: காங்கிரஸ்
மகளிர் இடஒதுக்கீடு மசோதா தோல்வி குறித்த பிரதமர் மோடியின் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸார் போராட்டம்
மகளிர் இடஒதுக்கீடு மசோதா தோல்வி குறித்த பிரதமர் மோடியின் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸார் போராட்டம் நடத்தினர்.
மக்களவையில் மகளிர் இடஒதுக்கீடு மசோதா தோல்வி குறித்து நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி பொய்யுரைப்பதாக காங்கிரஸார் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இந்த நிலையில், தில்லியில் இன்று பிரதமரின் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக தலைமை அலுவலகத்தை நோக்கி போராட்டம் நடத்திய காங்கிரஸார், "பெண்களுக்கான இடஒதுக்கீடு குறித்து பிரதமர் மோடி ஏன் முன்முயற்சி எடுக்கவில்லை என்பதுதான் இன்றைய போராட்டத்தின் நோக்கம்.
Advertisement
2023-ல் நிறைவேற்றப்பட்ட மகளிர் இடஒதுக்கீடு மசோதா, தொகுதி மறுவரையறை மற்றும் மக்கள்தொகை கணக்கெடுப்பு என்பவற்றில் ஏன் தொங்கிக் கொண்டிருக்கிறது? அது ஏன் 2034 வரையில் ஒத்திவைக்கப்படுகிறது?
மகளிர் இடஒதுக்கீட்டைத் தவறாகப் பயன்படுத்தியும், தொகுதி மறுவரையறையை ஓர் ஆயுதமாகப் பயன்படுத்தியும் நாட்டின் ஒருமைப்பாட்டையும் ஒற்றுமையையும் ஏன் தாக்குகின்றனர்?
பிரதமர் மோடி, நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரை காங்கிரஸுக்கு எதிரான சதி.
பெண்களை பாஜக ஏமாற்ற முயன்றது, பெண்களுக்கு எதிரான அவர்களின் விரோத நோக்கங்களைக் காட்டிவிட்டது.
மகளிர் இடஒதுக்கீடு என்ற பெயரில் தொகுதி மறுவரையறையைத் திணிப்பதே அவர்களின் உண்மையான நோக்கம். ஆனால், நாட்டில் மகளிர் இடஒதுக்கீடு அமல்படுத்தப்படும்வரையில் காங்கிரஸ் ஓயாது.
2014 முதல் பிரதமர் மோடி, நாட்டை வழிநடத்தி வருகிறார். 2014 முதல் 2026 வரையில் பல ஆண்டுகள் கடந்துவிட்டன. இந்தக் காலத்தில் பெண்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர்.
இந்த அரசுக்கு மகளிர் இடஒதுக்கீடு குறித்து அக்கறையில்லை. பாஜகவும் மோடியும் பெண்களுக்கு ஆதரவளிப்பதாக ஒரு பிம்பத்தை உருவாக்க மட்டுமே முயற்சி செய்து வருகின்றனர். ஆனால், உண்மையில் அவர்கள் பெண்களுக்கு ஆதரவானவர்கள் அல்ல. அவர்கள் பெண்களுக்கு எதிரானவர்கள்" என்று தெரிவித்தனர்.