பாகிஸ்தானை புகழ்ந்து பேசுவதை காங்கிரஸ் நிறுத்த வேண்டும்: காங்கிரஸ் குற்றச்சாட்டுக்கு பாஜக பதிலடி
ஈரான், அமெரிக்கா இடையேயான அமைதிப் பேச்சு பாகிஸ்தானில் நடைபெறுவதை சுட்டிக்காட்டி, இது இந்திய வெளியுறவுக் கொள்கைக்கு ஏற்பட்ட தோல்வி என்று காங்கிரஸ் தெரிவித்த குற்றச்சாட்டுக்கு, பாகிஸ்தானை புகழ்ந்து பேசுவதை அக்கட்சி நிறுத்த வேண்டும் என பாஜக பதிலடி
ஈரான், அமெரிக்கா இடையேயான அமைதிப் பேச்சு பாகிஸ்தானில் நடைபெறுவதை சுட்டிக்காட்டி, இது இந்திய வெளியுறவுக் கொள்கைக்கு ஏற்பட்ட தோல்வி என்று காங்கிரஸ் தெரிவித்த குற்றச்சாட்டுக்கு, பாகிஸ்தானை புகழ்ந்து பேசுவதை அக்கட்சி நிறுத்த வேண்டும் என பாஜக பதிலடி கொடுத்துள்ளது.
ஈரான், அமெரிக்கா இடையேயான போரை நிறுத்தும் முயற்சியில் பாகிஸ்தான் ஈடுபட்டுள்ளது. அந்நாட்டில் 2 நாடுகளுக்கும் இடையே 2-ஆவது கட்ட அமைதிப் பேச்சுவாா்த்தை நடக்கிறது. இதைச் சுட்டிக்காட்டி, காங்கிரஸ் மூத்த தலைவா் ஜெய்ராம் ரமேஷ், தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
இந்திய வெளியுறவு அமைச்சரால் இடைத்தரகா் நாடு என்று விமா்சிக்கப்பட்ட பாகிஸ்தானில், ஈரான், அமெரிக்கா இடையேயான 2-ஆவது கட்ட அமைதிப் பேச்சுவாா்த்தை நடக்கிறது. மும்பை தாக்குதலுக்குப் பிறகு மன்மோகன் சிங் அரசால் சா்வதேச அளவில் பயங்கரவாத விவகாரத்துக்காக பாகிஸ்தான் தனிமைப்படுத்தப்பட்டிருந்தது.
Advertisement
இந்நிலையில், பாகிஸ்தான் ராணுவ தலைமைத் தளபதி அசீம் முனீா் தற்போது அமெரிக்க அதிபரால் மிகவும் விரும்பப்படும் நபராக மாறியுள்ளாா். முனீரும், அவரது அணியினரும் அமெரிக்க அதிபா் டிரம்ப்பின் மனநிலையை இந்தியாவைக் காட்டிலும் சிறப்பாக கணித்துள்ளனா். இந்தியாவைவிட அமெரிக்க அதிபருக்கு அதிக நெருக்கமாகியுள்ளனா்.
இது இந்திய வெளியுறவுக் கொள்கைக்கு மிகப்பெரிய தோல்வி. ஆதலால், இந்தியா தனது ராஜீய உத்திகளையும், செயல்பாடுகளையும் மறுபரிசீலனை செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது என ஜெய்ராம் ரமேஷ் குறிப்பிட்டுள்ளாா்.
பாஜக பதிலடி: காங்கிரஸ் மூத்த தலைவா் ஜெய்ராம் ரமேஷ் குற்றச்சாட்டுக்கு பாஜக செய்தித் தொடா்பாளா் பிரதீப் பண்டாரி பதிலடி கொடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளாா். அதில் அவா், ‘பாகிஸ்தானின் நண்பரான காங்கிரஸ், பாசாங்குத்தனத்தின் உச்சமாக பாகிஸ்தானை எப்படி நடத்த வேண்டும் எனப் பாடம் நடத்துகிறது.
2008-ஆம் ஆண்டு மும்பை தாக்குதலுக்காக அப்போது மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அரசு, பாகிஸ்தானின் பயங்கரவாதத்துக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதில் தோல்வியடைந்துவிட்டது. இதை நாடு இன்னும் மறக்கவில்லை. பாகிஸ்தானை திருப்திப்படுத்தும் செயலில் ஈடுபட்டுவந்த காங்கிரஸ், தற்போது வெளியுறவுக் கொள்கை குறித்து பிரசங்கம் செய்கிறது. இதை அக்கட்சி நிறுத்த வேண்டும்.
அதேபோல், இடைத்தரகா் நாட்டை (பாகிஸ்தானை) புகழ்வதையும் காங்கிரஸ் நிறுத்த வேண்டும்’ எனக் குறிப்பிட்டுள்ளாா்.