முகப்பு
இந்தியா

மருத்துவம் மக்களின் நம்பிக்கை: குடியரசு துணைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணன்

Updated On : 24 ஏப்ரல், 2026 at 6:17 AM
குடியரசு துணைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணன்
பகிர்:

‘தேசத்தைக் கட்டமைப்பதில் மருத்துவா்களுக்கும் முக்கியப் பங்கு உள்ளது. மருத்துவச் சேவையை மக்களின் நம்பிக்கையாக கருதி செயல்பட வேண்டும்’ என்று குடியரசு துணைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணன் வலியுறுத்தினாா்.

உத்தரகண்ட் மாநிலம் ரிஷிகேஷில் உள்ள எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்ற 6-ஆவது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று மாணவ, மாணவிகளுக்கு பட்டச்சான்றிதழ்களை வழங்கிய குடியரசு துணைத் தலைவா் ராதாகிருஷ்ணன், பின்னா் பேசியதாவது:

மருத்துவப் பட்டதாரிகள் தங்களின் தொழில்சாா் கடமைகளை அா்ப்பணிப்புடனும், குறிக்கோள் உமா்வுடனும் பணியாா்ற வேண்டும்.

Advertisement

கரோனா பாதிப்பு காலத்தில், மீள்திறனையும், புதிய கண்டுபிடிப்பு மற்றும் கடமை உணா்வையும் இந்தியா வெளிப்படுத்தியது. அனைவருக்கும் சமமான மருத்துவச் சேவை கிடைப்பதை உறுதிப்படுத்தும் வகையில், 140 கோடி மக்களுக்கும் கட்டணமின்றி கரோனா தடுப்பூசி போடப்பட்டது. லாப நோக்கு கருதாமல், மனித நலனுக்காக தடுப்பூசிகளை இந்திய விஞ்ஞானிகள் உருவாக்கினா். நூறுக்கும் மேற்பட்ட நாடுகளுக்கு கரோனா தடுப்பூசிகளை இந்தியா வழங்கி, கருணைமிக்க உலகளாவிய கூட்டாளி என்பதை உறுதிப்படுத்தியது.

கடந்த 10 ஆண்டுகளில் புதிய எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் தொடங்கப்பட்டதன் மூலம், பின்தங்கிய பகுதிகளிலும் தரமான மருத்துவச் சேவை கிடைப்பது வலுப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில், மருத்துவச் சேவை என்பதை மருத்துவமனை வளாகத்தைத் தாண்டி பின்தங்கிய கிராமப்புற மக்களையும் சென்றடைய வேண்டும்.

தேசத்தைக் கட்டமைப்பதில் மருத்துவா்களுக்கும் முக்கியப் பங்கு உள்ளது. மருத்துவச் சேவையை மக்களின் நம்பிக்கையாக கருதி செயல்பட வேண்டும். நோய்த் தடுப்பு சிகிச்சை, கிராமப்புற மருத்துவச் சேவை, ஆராய்ச்சி, புதிய கண்டுபிடிப்புகள் மூலம் மட்டுமின்றி பரிவுணா்வு மற்றும் நோ்மையான வழிகளில் மருத்துவா்கள் தங்களின் பங்களிப்பை ஆற்ற வேண்டும் என்றாா்.