ஏப்.19-ல் இலங்கை செல்கிறார் குடியரசுத் துணைத் தலைவர்!
குடியரசுத் துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் இலங்கை செல்வது குறித்து...
குடியரசுத் துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் அரசு முறைப் பயணமாக இலங்கைக்குச் செல்வதாக, மத்திய அரசு தெரிவித்துள்ளது.
குடியரசுத் துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் வரும் ஞாயிற்றுக்கிழமை (ஏப். 19) முதல்முறையாக இலங்கை நாட்டுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொள்கிறார்.
வரும் ஏப். 20 வரையிலான குடியரசுத் துணைத் தலைவரின் இந்த 2 நாள் பயணத்தில் இலங்கையின் அதிபர் அநுர குமர திசாநாயக்க மற்றும் பிரதமர் ஹரினி அமரசூர்யா ஆகியோரை நேரில் சந்தித்து அவர் உரையாடுவார் என மத்திய வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது.
Advertisement
இதனைத் தொடர்ந்து, கொழும்புவில் இலங்கையின் மூத்த அதிகாரிகள் மற்றும் இந்திய வம்சாவளியினரைச் சந்திக்கும் குடியரசுத் துணைத் தலைவர் ராதாகிருஷ்ணன், அந்நாட்டில் நடைபெறும் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக, வளைகுடா போரால் இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு உருவானதைத் தொடர்ந்து சுமார் 38,000 மெட்ரிக் டன் அளவிலான எரிபொருளை அனுப்பிவைத்ததற்கு மத்திய அரசுக்கு அந்நாட்டு அதிபர் திசாநாயக்க நன்றி தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.