இலங்கை புறப்பட்டார் குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன்!
குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணனின் இலங்கைப் பயணம் குறித்து...
குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக இன்று(ஏப். 19) காலை இலங்கை புறப்பட்டார்.
குடியரசு துணைத் தலைவரான பிறகு சி.பி. ராதாகிருஷ்ணன் இலங்கைக்கு மேற்கொள்ளும் முதலாவது பயணம் என்பதாலும், அவர் தமிழ்நாட்டைச் சோ்ந்தவர் என்பதாலும் இந்தப் பயணம் இரு நாடுகளிலும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இரண்டு தெற்காசிய அண்டை நாடுகளுக்கும் இடையிலான இரு தரப்பு உறவில் இந்திய குடியரசு துணைத் தலைவரின் இலங்கைப் பயணம் திருப்புமுனையை ஏற்படுத்தக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Advertisement
இலங்கையில் தங்கியிருக்கும் இரண்டு நாள்களிலும், இந்திய குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் தனது முதல் நாள் அலுவலிலேயே (ஞாயிற்றுக்கிழமை) இலங்கை அதிபர் அநுர குமார திசாநாயக்க, பிரதமா் ஹரிணி அமர சூரிய ஆகியோருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளார்.
இதைத்தொடர்ந்து, இலங்கை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களையும் குடியரசு துணைத் தலைவர் சந்திக்கவுள்ளார்.
இத்தகைய உயர்நிலை சந்திப்புகள் நீங்கலாக, தனது பயணத்தின்போது இலங்கையின் வடக்கு, கிழக்கு மற்றும் மலையகப் பகுதிகளைச் சேர்ந்த தமிழ்ச் சமூகங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தலைவர்களையும் இந்திய குடியரசு துணைத் தலைவர் சந்திக்க உள்ளார்.
குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணனின் இலங்கைப் பயணம் மிகுந்த எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.