ஆம் ஆத்மியில் இருந்து மேலும் சில தலைவர்கள் விலகுவார்கள்: பாஜகவில் இணைந்த எம்.பி. ஸ்வாதி மாலிவால்
மோடிக்கு ஆதரவு! கேஜரிவால் மீது பழி! - பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி. ஸ்வாதி மாலிவால்
புது தில்லி : மாநிலங்களவை எம்.பி. ஸ்வாதி மாலிவால் தாம் சார்ந்திருந்த ஆம் ஆத்மி கட்சியிலிருந்து விலகி பாரதீய ஜனதாவில் ஐக்கியமாகியுள்ளார். இந்நிலையில், அவர் ஆம் ஆத்மி நிறுவனரும் அதன் தலைமை ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கேஜரிவால் மீது குற்றச்சாட்டுகளைச் சுமத்தியுள்ளார்.
தில்லியின் முன்னாள் முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் உதவியாளா் பிபவ் குமாா் 2024-இல் முதல்வரின் இல்லத்தில் ஸ்வாதி மாலிவாலைத் தாக்கியதாக குற்றம் சாட்டப்பட்டது. இதையடுத்து, பல்வேறு தருணங்களில் அவர் ஆம் ஆத்மி மீதான விமர்சனத்தையும் பதிவிட்டு வந்தார். மாலிவால் அளித்த பிபவ் குமாருக்கு எதிரான புகாரை வாபஸ் பெற தான் கட்டாயப்படுத்தப்பட்டதாக மாலிவால் தெரிவித்தார். இந்நிலையில், அவர் ஆம் ஆத்மி கட்சியிலிருந்து விலகி பாரதீய ஜனதாவில் ஐக்கியமாகியுள்ளார்.
இதைத்தொடர்ந்து, பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அவர் சனிக்கிழமை(ஏப். 25) அளித்துள்ளதொரு பேட்டியில் தெரிவித்திருப்பதாவது : “ஒருபுறம் சீர்கேடான கேஜரிவாலின் ஆட்சி; இன்னொருபுறம் பிரதமர் மோடி, அமித் ஷாவின் தீர்க்கமான தலைமையின்கீழ், நமது நாடு சந்தித்து வரும் வரலாறு காணாத மாற்றங்கள்.
Advertisement
இக்கட்சியிலிருந்து மக்கள் அச்சத்தால் விலகவில்லை; அரவிந்த் கேஜரிவால் காரணமாகவே விலகுகின்றனர். வரும் நாள்களில் இக்கட்சியிலிருந்து மேலும் சில தலைவர்கள் விலகுவார்கள். எந்தவொரு நல்ல மனிதரும் அவருடன்(அரவிந்த் கேஜரிவால்) சேர்ந்து பணியாற்ற முடியாது. அவர் சொல்வதொன்று... செய்வதொன்று.
தன்னை சாமானியராக நிலைநிறுத்தியிருந்த கேஜரிவால் மாறிவிட்டார். எளிமையாக இருந்த அவரது வாழ்க்கைநிலை இன்று மாறிவிட்டது. பஞ்சாப் அரசை ரிமோட் கட்டுப்பாட்டால் இயக்கி வருகிறார். பஞ்சாப் அரசை தில்லியிலிருந்தபடி, ஏடிஎம் போல பயன்படுத்துகிறார்.
கவனமாக ஆராய்ந்தபின்னரே நான் பாஜகவில் இணைந்தேன். இதில், என்னை யாரும் கட்டாயப்படுத்தவில்லை” என்றார்.