அனைத்து இந்துக்களும் பாஜகவுக்கே வாக்களிக்கின்றனர்! சுவேந்து அதிகாரி
எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி பேட்டி...
மேற்கு வங்கத்தில் 2-ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், அனைத்து இந்துக்களும் பாஜகவிற்கே வாக்களித்து வருவதாகவும் அனைவரும் பெருமளவில் வாக்களிக்க வேண்டும் என்றும் பாஜக மூத்த தலைவர் சுவேந்து அதிகாரி கூறினார்.
294 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட மேற்கு வங்கத்தில் முதல்கட்டமாக 152 தொகுதிகளுக்கு கடந்த ஏப். 23 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில் இன்று(ஏப். 29) 142 தொகுதிகளுக்கு இரண்டாம் மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
முதல்கட்டத் தேர்தலில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு 93.19 சதவிகித வாக்குகள் பதிவாகின.
Advertisement
இன்றைய 2-ம் கட்டத் தேர்தலில் 1.64 கோடி ஆண்கள், 1.57 கோடி பெண்கள், 792 மூன்றாம் பாலினத்தவர் என 3.21 கோடி பேர் வாக்களிக்கத் தகுதிபெற்றுள்ளனர். வாக்குப்பதிவுக்காக 41,001 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மாநில எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி, "அனைவரும் பெருமளவில் வாக்களிக்குமாறு நான் கேட்டுக்கொள்கிறேன். அனைத்து இந்துக்களும் பாஜகவிற்கே வாக்களித்து வருகின்றனர்" என்று தெரிவித்தார்.
பவானிபூர் தொகுதியில் உள்ள வாக்குச்சாவடிகளை ஆய்வு செய்ததுடன் அப்பகுதியில் அமைந்துள்ள அனுமன் கோயிலிலும் சுவேந்து அதிகாரி சிறப்புப் பிரார்த்தனை செய்தார்.
கடந்த 15 ஆண்டுகளாக இத்தொகுதியைத் தன்வசம் வைத்துள்ள முதல்வர் மம்தா பானர்ஜியை எதிர்த்து, பவானிபூர் தொகுதியில் சுவேந்து அதிகாரி போட்டியிடுகிறார். சுவேந்து அதிகாரி நந்திகிராம் தொகுதியிலும் போட்டியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இரண்டாம் கட்ட வாக்குபதிவு நடைபெற்று வரும் நிலையில், காலை 9 மணி நிலவரப்படி, 18.39 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்தியத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.