மேற்கு வங்கம்: நந்திகிராம் தொகுதியில் சுவேந்து அதிகாரி வேட்புமனு தாக்கல்!
நந்திகிராம் தொகுதியில் பாஜக மூத்த தலைவர் சுவேந்து அதிகாரி வேட்புமனு தாக்கல்...
மேற்கு வங்கத்தில் நந்திகிராம் தொகுதியில் பாஜக மூத்த தலைவர் சுவேந்து அதிகாரி இன்று(மார்ச் 30) வேட்புமனு தாக்கல் செய்தார்.
294 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட மேற்குவங்கத்தில், 152 தொகுதிகளுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு ஏப். 23 ஆம் தேதியும் 142 தொகுதிகளுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு ஏப். 29 ஆம் தேதியும் நடைபெற உள்ளது. மே 4 அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
தொடர்ந்து 4 ஆவது முறையாக ஆட்சியமைக்க திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மமதாவும் அதேநேரத்தில் முதல்முறையாக ஆட்சியைக் கைப்பற்ற பாஜக தலைவர்களும் முனைப்பு காட்டி வருகின்றனர்.
இந்நிலையில் 152 தொகுதிகளுக்கான முதல் கட்டத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று(மார்ச் 30) தொடங்கியுள்ளது.
மாநில எதிர்க்கட்சித் தலைவரும் பாஜக மூத்த தலைவருமான சுவேந்து அதிகாரி இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். மத்திய பாஜக அமைச்சர் தர்மேந்திர பிரதான் முன்னிலையில் நந்திகிராம் தொகுதியில் சுவேந்து அதிகாரி வேட்புமனு தாக்கல் செய்தார்.
திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த சுவேந்து அதிகாரி கடந்த 2016(திரிணமூல்), 2021(பாஜக) தேர்தல்களில் நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இம்முறை முதல்வர் மமதா போட்டியிடும் பவானிபூர் தொகுதியிலும் சுவேந்து போட்டியிடுகிறார்.
முதல்வர் மமதா பானர்ஜி கடந்த முறை பவானிபூர், நந்திகிராம் ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டு நந்திகிராமில் தோல்வியைத் தழுவிய நிலையில், இம்முறை பவானிபூர் தொகுதியில் மட்டும் போட்டியிடுகிறார்.
முதல் கட்டத் தேர்தலுக்கான வேட்புமனுவை தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் ஏப். 6. அதற்கு மறுநாள் ஏப். 7 ஆம் தேதி வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறும். ஏப். 9 வரை வேட்புமனுக்களைத் திரும்பப் பெறலாம்.