தமிழகம், மேற்கு வங்கத்தில் ஆட்சி அமைப்போம்! பாஜக மூத்த தலைவர்
தமிழகம், மேற்கு வங்கத்தில் ஆட்சி அமைப்போம் என பாஜக மூத்த தலைவர் கூறியது பற்றி...
மேற்குவங்கம், தமிழ்நாடு மாநிலத் தேர்தல்களில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெறும் என்று மேற்கு வங்க பாஜக மாநிலத் தலைவர் மதன் ரத்தோர் கூறியுள்ளார்.
294 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட மேற்கு வங்கத்தில் முதல்கட்டமாக 152 தொகுதிகளுக்கு கடந்த ஏப். 23 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில் இன்று(ஏப். 29) 142 தொகுதிகளுக்கு இரண்டாம் மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
தேர்தல் பற்றி மேற்கு வங்க பாஜக மாநிலத் தலைவர் மதன் ரத்தோர் பேசுகையில்,
Advertisement
"மேற்கு வங்கத்தில் நாங்கள் 160 முதல் 165 இடங்களைப் பெறுவோம் என்று நம்புகிறேன். முதல் கட்டத் தேர்தலில் நாங்கள் கண்ட அதே உற்சாகம், 2 ஆம் கட்டத்திலும் மக்களிடையே காணப்படுகிறது. காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ் இரண்டும் ஒன்றுக்கொன்று ஒத்தவைதான், வேறுவேறு அல்ல.
ஆனால், திரிணமூல் காங்கிரஸ் என்பது காங்கிரஸுக்கே ஒரு எதிரி என்பதையும் இந்த மாநில மக்கள் நன்கு அறிவர்.
திரிணமூல் காங்கிரஸ் திருப்திப்படுத்தும் அரசியலில் ஈடுபடுவதால், நாங்கள் அதற்கு முக்கியத்துவம் அளிப்பதில்லை. மத்திய அரசு வகுத்துள்ள வழிகாட்டுதல்களையும் நெறிமுறைகளையும் அவர்கள் பின்பற்றுவதில்லை. மக்கள் ஒரு மாற்றத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள்..
தமிழ்நாட்டில் அதிமுகவுடனான கூட்டணியின் மூலம் நாங்கள் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையில் உள்ளோம். அஸ்ஸாம், புதுச்சேரியிலும் நாங்கள் வெற்றி வாகை சூடவுள்ளோம்.” என்று கூறினார்.