அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா சிறுபான்மையினரை சுடுவதுபோல காட்டப்பட்ட விடியோவுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கடும் கண்டனத்தைப் பதிவு செய்திருக்கிறார்.
அம்மாநில பாஜக பகிர்ந்த செய்யறிவு (ஏஐ) அந்த விடியோவில், கையில் நீள துப்பாக்கியுடன் இருக்கும் சர்மா, எதிரில் இரு முஸ்லீம் நபர்களுக்கு குறிவைத்து சுடத் தயாராக இருப்பது போல காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், 1.20 கோடிக்கும் மேற்பட்ட முஸ்லீம் மக்கள்தொகையைக் கொண்ட அஸ்ஸாமில், மக்களால் ஆட்சிப் பொறுப்புக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தலைவர் ஒருவர், வெறுப்புணர்வை வெளிப்படையாகப் பகிரும் கோணத்தில் எடுக்கப்பட்ட விடியோ சர்வதேச அளவில் கண்டனத்தை பெற்றுள்ளது.
இது குறித்து, பினராயி விஜயன் இன்று(பிப். 9) வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், ‘அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மாவின் விடியோ ஓர் அதிர்ச்சியளிக்கக்கூடிய, மியா சமூகத்தின் மீதான நேரடி வன்முறையைத் தூண்டும் செயலாகும்‘ என்று குறிப்பிட்டிருக்கிறார்.
மேலும், ‘தேர்தல் லாபத்துக்காக வெறுப்புணர்வை இயல்பானதொன்றாக மாற்ற துடிக்கும் முயற்சிகள் நமது அரசமைப்புக்கான தீங்கு. இவ்விவகாரத்தில் பாஜக தேசிய தலைமையின் மௌனம் பிளவுவாத அரசியல் மீதான அவர்களின் பற்றைத் தெளிவாக்குகிறது.
இத்தகைய வகுப்புவாத வெறுப்புணர்வுச் செயல்களை எதிர்க்க மதச்சார்பற்ற, ஜனநாயக சக்திகள் கட்டாயம் ஒன்றிணைய வேண்டும்; இந்தியாவின் பல்லுணர்வு ஆன்மாவைப் பாதுகாக்க வேண்டும்’ என்றிருக்கிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.