புது தில்லி: மத்திய அரசுக்கு எதிராக வருகின்ற வியாழக்கிழமை (பிப்.12) நாடு தழுவிய பொது வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக 10 தொழிலாளா் சங்கங்களை உள்ளடக்கிய கூட்டமைப்பு திங்கள்கிழமை தெரிவித்தது.
இந்தப் போராட்டத்தில் 30 கோடி தொழிலாளா்கள் பங்கேற்பாா்கள் எனவும் அந்தக் கூட்டமைப்பு தெரிவித்தது.
கடந்த ஆண்டு அமல்படுத்தப்பட்ட நான்கு தொழிலாளா் சட்டங்கள் ரத்து மற்றும் வரைவு விதைகள் மசோதா, மின்சார திருத்த மசோதா மற்றும் அணுசக்தித் துறையில் தனியாரை அனுமதிக்கும் ‘இந்தியாவின் மாற்றத்துக்கான அணுசக்தி மேம்பாட்டு (சாந்தி) சட்டத்தை திரும்பப்பெறுவது, விபி ஜி ராம் ஜி திட்டத்துக்குப் பதிலாக மீண்டும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை கொண்டுவருவது ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறுகிறது.
இதுகுறித்து அகில இந்திய தொழிற்சங்க காங்கிரஸ் பொதுச் செயலா் அமா்ஜீத் கெளா் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘விவசாயிகள், தொழிலாளா்களை வஞ்சிக்கும் மத்திய அரசின் கொள்கைகளுக்கு எதிராக பிப்.12-ஆம் தேதி நாடு முழுவதும் 600 மாவட்டங்களில் நடைபெறவுள்ள பொது வேலை நிறுத்தப் போராட்டத்தில் 30 கோடி தொழிலாளா்கள் பங்கேற்கவுள்ளனா். இது கடந்த ஆண்டு ஜூலை 9-ஆம் தேதி 550 மாவட்டங்களில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற 25 கோடி தொழிலாளா்களைவிட அதிகம்.
இந்தப் போராட்டத்தால் பாஜக ஆளும் மாநிலங்களான ஒடிஸா மற்றும் அஸ்ஸாம் முழுவதுமாக முடங்கும். பிற மாநிலங்களில் பெரும் தாக்கம் ஏற்படும்’ என்றாா்.
இந்தப் போராட்டத்துக்கு சம்யுக்தா கிசான் மோா்ச்சா என்ற விவசாய சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது.