பாஜக தேசிய தலைவர் நிதின் நவீனுக்கு பிகார் சட்டப்பேரவையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
பாஜக தேசிய செயல் தலைவராக இருந்த நிதின் நவீன், தேசிய தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து, பாஜக தலைமை அலுவலகத்தில் 12-ஆவது பாஜக தேசியத் தலைவராக நிதின் நவீன் ஜன.21ல் பொறுப்பேற்றுக்கொண்டார்.
இதையடுத்து, இன்று சட்டப்பேரவையில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அவையில் தற்போது தனிப்பெரும் கட்சியாக இருக்கும் பாஜக உறுப்பினர்கள், 'ஜெய் ஸ்ரீ ராம்' மற்றும் 'பாரத் மாதா கி ஜெய்' போன்ற கோஷங்களை எழுப்பி பங்கிபூர் எம்எல்ஏவை வரவேற்றனர்.
பாஜகவின் மூத்த அவை தலைவரான பிரேம் குமார், உறுப்பினர்களில் ஒருவர் தேசிய அரசியலில் உச்சத்தை எட்டியுள்ளது அவைக்குப் பெருமை சேர்க்கும் விஷயம் என்று கூறினார். அதன்பிறகு அவைத்தலைவர் பல்வேறு கட்சிகளின் தலைவர்களை நவீன் குறித்து தங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளுமாறு வலியுறுத்தினார்.
இதையடுத்து, துணை முதல்வரும் பாஜக உறுப்பினருமான சாம்ராட் சௌத்ரி, அமைச்சரும் ஜே.டி.(யு) எம்எல்ஏவுமான விஜய் குமார் சௌத்ரி, லோக் ஜனசக்தி கட்சியின் (ராம் விலாஸ்) ராஜு திவாரி, ராஷ்ட்ரிய லோக் மோர்ச்சாவின் மாதவ் ஆனந்த் மற்றும் இந்துஸ்தானி அவாம் மோர்ச்சாவின் ஜோதி தேவி ஆகியோர் தங்களின் கருத்துகளை பகிர்ந்துகொண்டனர்.
மாநிலத்தில் பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வருவதை எதிர்த்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.