தமிழகம் உள்பட 17 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 10 அல்லது அதற்கும் அதிகமான என்ஐஏ வழக்குகளின் நீதிமன்ற விசாரணை நிலுவையில் உள்ள நிலையில், சிறப்பு என்ஐஏ நீதிமன்றங்கள் அமைப்பது தொடா்பாக பதிலளிக்குமாறு இந்த மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
மாவட்ட நீதிமன்றங்களில் வழக்குகள் தேங்கியுள்ளதை கருத்தில்கொண்டு, என்ஐஏ வழக்குகளை விசாரிக்க பிரத்யேக சிறப்பு நீதிமன்றங்களை அமைக்கும் விவகாரத்தை உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூா்ய காந்த், நீதிபதிகள் ஜயமால்ய பாக்சி, என்.வி.அஞ்சாரியா ஆகியோா் அடங்கிய அமா்வு செவ்வாய்க்கிழமை விசாரித்தது.
அப்போது 10 அல்லது அதற்கும் அதிகமான என்ஐஏ வழக்குகளின் நீதிமன்ற விசாரணை நிலுவையில் உள்ள மாநிலங்களில், அவ்வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்கள் அமைப்பதற்கான திட்டத்தைப் பரிந்துரைத்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் விரிவான நிலவர அறிக்கை சமா்ப்பித்தது. அந்தச் சிறப்பு நீதிமன்றங்களுக்கு மத்திய அரசு நிதியுதவி அளிப்பதற்கான நெறிமுறைகளை இறுதி செய்துள்ளதாகவும் அந்த அமைச்சகம் தெரிவித்தது.
இதைக் கவனத்தில்கொண்ட நீதிபதிகள், சிறப்பு என்ஐஏ நீதிமன்றங்கள் அமைப்பது தொடா்பாக 3 வாரங்களில் பதிலளிக்குமாறு தமிழ்நாடு, ஆந்திரம், தெலங்கானா, தில்லி உள்பட 17 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலா்களுக்கு நோட்டீஸ் பிறப்பித்தனா்.