கர்நாடகம் உள்பட 22 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஏப்ரல் முதல் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் தொடங்கும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
கடந்த ஆண்டு ஜூன் 24 ஆம் தேதி முதல் நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் (எஸ்ஐஆர்) மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முதல்கட்டமாக பிகாரில் பேரவைத் தேர்தலுக்கு முன்னதாக சிறப்புத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு சுமார் 65 லட்சத்துக்கும் அதிகமான வாக்காளரின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன.
பிகாரைத் தொடர்ந்து எஸ்ஐஆர் பணிகளின் 2 ஆம் கட்டமாக தமிழகம், கேரளம், மேற்குவங்கம், குஜராத், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம் ஆகிய 7 மாநிலங்களுக்கும் சத்தீஸ்கர், கோவா, புதுச்சேரி, லட்சத்தீவு, அந்தமான் நிகோபார் தீவுகள் என 5 யூனியன் பிரதேசங்களுக்கும் மேற்கொள்ளப்பட்டன. அதன்படி, தமிழகத்தில் சுமார் 97 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டன.
இந்த நிலையில், 8 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தம் நடைபெற்றதைத் தொடர்ந்து, கர்நாடகம் உள்பட 22 மாநிலங்களில் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கான வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தம் மேற்கொள்வதற்கான பணிகள் ஏப்ரல் மாதத்தில் தொடங்கும் என்றும், மாநிலத் தேர்தல் அதிகாரிகள் பணிகள் தீவிரப்படுத்த தலைமைத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இதுவரை திருத்தப் பணிகள் நடைபெறாத மாநிலங்களான ஆந்திரம், அருணாசலப் பிரதேசம், சண்டீகர், தாத்ரா - நாகர் ஹவேலி, டாமன் - டையூ, ஹரியாணா, ஹிமாசலப் பிரதேசம், ஜம்மு-காஷ்மீர், ஜார்க்கண்ட், கர்நாடகம், லடாக், மகாராஷ்டிரம், மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, தில்லி, ஒடிசா, பஞ்சாப், சிக்கிம், திரிபுரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் எஸ்ஐஆர் பணிகளுக்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.