பீராகா்கி மேம்பாலத்தில் கைவிடப்பட்ட காருக்குள் இறந்து கிடந்த மூவா் குறித்த விசாரணையில், பாபா என்று அழைக்கப்படும் 72 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார். விஷம் தடவிய லட்டுக்களை அந்த மூவருக்கும் அளித்து அவர்களைக் கொலை செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
மாந்திரீகம் செய்து, பிரசாதம் அளிப்பதாகக் கூறி மூவருக்கும் அளித்த லட்டுவில் விஷம் கலந்து கொடுத்திருப்பது உடல் கூராய்வில் தெரிய வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை தில்லியின் வெளிப்புற பகுதியான பீராகா்கி மேம்பாலத்தில் கைவிடப்பட்ட காருக்குள் ஒரு பெண் உள்பட மூன்று போ் இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், அதுகுறித்த விசாரணையில், பாபா என்பவர் விசாரணை வளையத்துக்குள் வைக்கப்பட்டிருந்த நிலையில், அவர்தான் கொலையைச் செய்திருப்பதும், ஆனால் அதற்கு அவர் எந்த வருத்தமும் அடையவில்லை என்றும் காவல்துறை அதிகாரிகள் கூறியிருக்கிறார்கள.
ஆன்மிக மதகுரு என கூறிக்கொள்ளும் பாபா என்பவருக்கும் இந்த மூவருக்கும் உள்ள தொடர்பு குறித்து காவல்துறை விசாரணை நடத்தி வந்த நிலையில், வெளியான தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
கம்ருதீன் எனப்படும் பாபா, உத்தரப்பிரதேச மாநிலம் ஃபிரோஸாபாத்தைச் சேர்ந்தவர், அவர் கைது செய்யப்பட்டு காவல்துறை விசாரணையில் வைக்கப்பட்டுள்ளார்.
அவரது வங்கிக் கணக்கில் பணப்பரிவர்த்தனைகள் குறித்து காவல்துறை விசாரணையைத் தொடக்கியிருக்கிறார்கள். இதுபோன்று வேறு மாநிலங்களில் கொலைகளை செய்திருக்கிறாரா என்றும் விசாரணை நடந்து வருகிறது.
முன்னதாக, மரணமடைந்த மூவரும், சம்பவப் பகுதியில் உள்ள ஒரு கடையில் பாபா என்பவருடன் இருந்த சிசிடிவி காட்சி வெளியானது. அதுபோல, உடல்கள் கண்டெடுக்கப்பட்ட நாளில், பாபாவும், மற்றொரு நபரும் அந்த காருக்கு அருகே சென்று பார்த்திருக்கும் சிசிடிவி காட்சிகளும் வெளியாகின. எனவே மரணமடைந்தவர்களுக்கும் பாபாவுக்கும் என்ன தொடர்பு என்பது குறித்து நடந்த விசாரணையில, அவர்களை பாபா கொலை செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இறந்தவர்கள் ரந்தீர் (76), சிவ நரேஷ் சிங் (47), லஷ்மி தேவி (40) ஆகியோர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.
கைதான பாபாவின் செல்போன் எண்ணை சோதனை செய்ததில், அவர் ஏராளமான நபர்களிடம் தொடர்புகொண்டு பேசியிருப்பதும், கடந்த 2025ஆம் ஆண்டு உத்தரப்பிரதேசத்தில் இதேப்போல இரண்டு பேர் கொலை செய்யப்பட்ட சம்பவமும் விசாரணை வளையத்துக்குள் வந்துள்ளது. இவர் மீது ஏற்கனவே ராஜஸ்தானில் ஒரு வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
மாந்ரீகம் செய்வதாகக் கூறி ரூ.2 லட்சத்தைப் பெற்றுக்கொண்டு லட்டுவில் விஷம் கலந்துகொடுத்து கொலை செய்திருப்பதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. சிசிடிவி காட்சிகள் உள்ளிட்ட பல விவரங்களை அடிப்படையாகக் கொண்டு பாபா கைது செய்யப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.