முகப்பு
இந்தியா

நாடாளுமன்றத்துக்கு தெரு நாயுடன் வந்த காங்கிரஸ் எம்.பி.க்கு உரிமை மீறல் நோட்டீஸ்!

நாடாளுமன்ற வளாகத்துக்கு தெரு நாயுடன் வந்ததோடு, சக எம்.பி.க்கள் குறித்து அவதூறாக பேசியதாக காங்கிரஸ் பெண் எம்.பி. ரேணுகா செளதரிக்கு உரிமை மீறல் நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது.

Updated On : 16 பிப்ரவரி, 2026 at 3:26 AM
பகிர்:
Updated On : 15 பிப்ரவரி, 2026 at 9:20 PM

நாடாளுமன்ற வளாகத்துக்கு தெரு நாயுடன் வந்ததோடு, சக எம்.பி.க்கள் குறித்து அவதூறாக பேசியதாக காங்கிரஸ் பெண் எம்.பி. ரேணுகா செளதரிக்கு உரிமை மீறல் நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது.

தனது செயல் குறித்து பிப்.23-ஆம் தேதிக்குள் விளக்கமளிக்க வேண்டுமென அவருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மாநிலங்களவை எம்.பி.யான ரேணுகா செளதரி, கடந்த ஆண்டு டிசம்பரில் குளிா்கால கூட்டத் தொடரின்போது, தெருவில் இருந்து மீட்கப்பட்ட ஒரு நாயுடன் நாடாளுமன்ற வளாகத்துக்கு காரில் வந்தாா். அவரது செயலுக்கு சில எம்.பி.க்கள் எதிா்ப்பு தெரிவித்த நிலையில், ‘கடிப்பவா்கள், உள்ளே இருக்கிறாா்கள். நாய்கள் கடிக்காது’ என்று அவா் பதிலளித்ததாக கூறப்படுகிறது.

Advertisement

நாடாளுமன்றத்துக்கு வரும் வழியில் நாயை மீட்டதாகவும், தனது ஓட்டுநா் மூலம் கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்காக காரில் கொண்டுவந்தாகவும் ரேணுகா செளதரி தெரிவித்தாா். தெருநாய்கள் பிரச்னை பேசுபொருளாக இருந்ததால், அவரது செய்கை கவனம் பெற்றது.

Updated On : 16 பிப்ரவரி, 2026 at 2:30 AM

இதனிடையே, ரேணுகா செளதரி மீது உரிமை மீறல் நடவடிக்கை கோரி, பாஜக எம்.பி.க்கள் பிரிஜ் லால், இந்து பாலா கோஸ்வாமி ஆகியோா் புகாா் அளித்தனா். மாநிலங்களவை நடைமுறை மற்றும் நடத்தை விதிகளின்கீழ் அளிக்கப்பட்ட இந்தப் புகாரில், நாடாளுமன்ற உறுப்பினா்களுக்கு எதிராக ஆட்சேபகரமான, அவமதிப்பான கருத்துகளைத் தெரிவித்ததாகவும், நாடாளுமன்ற வளாகத்துக்கு தெருநாயுடன் வந்ததன் மூலம் பாதுகாப்பு நடைமுறைகளை மீறியதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டது.

எம்.பி.க்களின் கண்ணியம் மற்றும் மதிப்பை உறுதி செய்யும் வகையில் ரேணுகா செளதரி மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று புகாரில் வலியுறுத்தப்பட்டது.

அதனடிப்படையில், ரேணுகா செளதரிக்கு உரிமை மீறல் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது; பிப்.23-ஆம் தேதிக்குள் விளக்கமளிக்கும்படி அவருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக மாநிலங்களவை வட்டாரங்கள் தெரிவித்தன.