எப்ஸ்டீன் கோப்புகளில் குற்றம்சாட்டப்பட்டுள்ள ஹர்தீப் சிங் புரியை மத்திய அமைச்சரவையில் இருந்து நிக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த பெரும் பணக்காரரான ஜெஃப்ரி எப்ஸ்டீன் சிறுமிகளைக் கடத்திப் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதற்காக, கைது செய்யப்பட்ட சிறையில் மர்மமான முறையில் உயிரிழந்தார்.
அமெரிக்க நீதித் துறை வெளியிட்ட எப்ஸ்டீன் கோப்புகளில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பிரபலங்கள், தலைவர்கள் எப்ஸ்டீனுடன் பகிர்ந்த புகைப்படங்கள், மின்னஞ்சல்கள் குறித்த தரவுகள் வெளியாகி உலகளவில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளன.
எப்ஸ்டீன் கோப்புகளில், மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சர் ஹர்தீப் சிங் புரி மற்றும் தொழிலதிபர் அனில் அம்பானி உள்ளிட்டோருக்கு எதிரான ஆதாராங்கள் சிக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், குற்றவாளி எப்ஸ்டீனுடன் தொடர்பில் இருந்ததற்கான போதுமான ஆதாரங்கள் கிடைத்தும் அவருக்கு எதிரான எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
இதுகுறித்து, அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டதாவது:
“எப்ஸ்டீனின் கோப்புகளில் குற்றம்சாட்டப்பட்ட நபர்களுக்கு எதிராக பல்வேறு நாடுகளில் உறுதியான சட்ட மற்றும் தண்டனைக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பிரிட்டனில் இளவரசர் ஆண்ட்ரூவின் பட்டங்கள் பறிக்கப்பட்டு அவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், பலர் தங்கள் பதவிகளை ராஜிநாமா செய்ய நிர்பந்திக்கப்பட்டுள்ளனர்.
இந்த விவகாரத்தில், மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி மற்றும் தொழிலதிபர் அனில் அம்பானி ஆகியோரின் தொடர்புக்கான ஆதாரங்கள் சிக்கியுள்ளபோதிலும் அவர்களுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு மத்திய அரசு எந்தவொரு முயற்சியும் எடுக்கவில்லை.
எப்ஸ்டீன் கோப்புகள் குறித்து நாடாளுமன்றத்தில் எந்தவொரு விவாதத்தையும் மத்திய அரசு அனுமதிக்கவில்லை. ஆனாலும், பதவி நீக்கம் செய்யப்படுவதற்குப் பதிலாக, ஹர்தீப் சிங் பூரி அனைத்து வழிகளிலும் பாதுகாக்கப்படுகிறார்.
இந்தச் சூழ்நிலையில், தேசிய அளவில் ஏற்பட்ட இந்த அவமானத்தை நிவர்த்தி செய்ய ஹர்தீப் சிங் புரியை மத்திய அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடியை வலியுறுத்துகின்றோம்” என்று கூறப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.