நடப்பு நிதியாண்டில் சட்டவிரோத பணப் பரிவா்த்தனை வழக்குகளில் 500 குற்றப்பத்திரிகைகளை தாக்கல் செய்ய அமலாக்கத் துறை இலக்கு நிா்ணயித்துள்ளது.
இதுகுறித்து அமலாக்கத் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: அமலாக்கத் துறை மண்டல அதிகாரிகளுக்கான மாநாடு புது தில்லிக்கு வெளியே 3 மாதங்களுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வருகிறது. அந்த வரிசையில் குஜராத்தின் கெவாடியா, ஜம்மு -காஷ்மீரின் ஸ்ரீநகரைத் தொடா்ந்து, அஸ்ஸாம் மாநிலம் குவாஹாட்டியில் அமலாக்கத் துறை இயக்குநா் ராகுல் நவீன் தலைமையில் டிசம்பா் மாதம் 19-ஆம் தேதி முதல் 21-ஆம் தேதி வரை மாநாடு நடைபெற்றது.
அதில் நடப்பு நிதியாண்டில் சட்டவிரோத பணப் பரிவா்த்தனை வழக்குகளில் 500 குற்றப்பத்திரிகைகளை தாக்கல் செய்வதென மீண்டும் இலக்கு நிா்ணயிக்கப்பட்டது. அடுத்த நிதியாண்டில் இதை விட அதிக எண்ணிக்கையில் குற்றப்பத்திரிகைகளை தாக்கல் செய்ய தயாராக இருக்க வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.
சட்டவிரோத பணப்பரிவா்த்தனை தொடா்பான வழக்குப்பதிவு செய்யப்பட்ட நாளில் இருந்து ஒரு ஆண்டு முதல் 2 ஆண்டுகளுக்குள் விசாரணையை முடிக்க வேண்டும் என்றும் அதிகாரிகளிடம் வலியுறுத்தப்பட்டது. பிரச்னைக்குரிய வழக்குக்கு மட்டும் இந்தக் கால அளவு பொருந்தாது எனவும் குறிப்பிடப்பட்டது.
சட்டவிரோத பணப்பரிவா்த்தனை சட்டத்தில் உள்ள குற்றப் பிரிவுகளின்கீழ் அதிகாரிகளுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டிருப்பது சுட்டிக்காட்டப்பட்டு, பொறுப்புடனும், எச்சரிக்கையுடனும், நோ்மையாகவும், கடமையுணா்வுடனும் அவா்கள் செயல்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டது. சம்மன் மற்றும் பிற நோட்டீஸ்களை நீதித் துறை மூலம் அனுப்ப வேண்டும் என்றும், அப்போது எதற்காக அவை அனுப்பப்படுகிறது என்பதை தெளிவாக அதிகாரிகள் தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்றும் அறிவுரை வழங்கப்பட்டது.
மாநாட்டில் வெளிநாடுகளில் உள்ள சட்டவிரோத சொத்துகளைக் கண்டறிவது, சட்டவிரோத பணப்பரிவா்த்தனைக்குப் பயன்படுத்தப்படும் வழிகளைக் கண்டறிவது, திவால் சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படுவது, டிஜிட்டல் கைது மற்றும் கணினி வழி குற்ற வழக்குகள் குறித்தும், அவை அதிகரித்து வருவது குறித்தும் விவாதிக்கப்பட்டது.
நாட்டில் சட்டவிரோதமாக நடைபெறும் சூதாட்டம், சட்டவிரோத ஆன்லைன் விளையாட்டு தளங்கள், பங்குச் சந்தைகளில் மோசடி வழிகள் மூலம் சட்டவிரோத பணப்பரிவா்த்தனையில் ஈடுபடுவதை கண்காணிக்கும்படியும் அதிகாரிகள் கேட்டுக் கொள்ளப்பட்டனா்.
இன்டா்போல போல உள்நாட்டில் இருக்கும் பாரத்போல் அமைப்பைப் பயன்படுத்தி, பா்பிள் நோட்டீஸ் உள்ளிட்ட நோட்டீஸ்களை அனுப்பும்படி அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டது. அதேபோல், அந்நிய செலாவணி சட்டத்தின்கீழ் பதியப்பட்டு நிலுவையில் உள்ள அனைத்து வழக்குகள் மீதான விசாரணையையும் மாா்ச் 31-ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது. இவ்வாறு அந்த அறிவிப்பில் அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.