மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!
கலவரத்தின்போது இடம்பெயர்ந்தவர்களுக்கு வீடுகள் கட்டுவது பற்றி..
மணிப்பூரின் ஜிரிபாம் மாவட்டத்தில் கலவரத்தின்போது இடம்பெயர்ந்தவர்களின் மறுவாழ்வுக்காக 5 ஆயிரம் வீடுகள் கட்டுவதற்கு மத்திய வேளாண்மை மற்றும் கிராமப்புற மேம்பாடு அமைச்சர் சிவராஜ் சிங் சௌகான் ஒப்புதல் அளித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மணிப்பூரில் சில தினங்களுக்கு முன் குடியரசுத் தலைவா் ஆட்சி வாபஸ் பெறப்பட்டு, முதல்வா் கெம்சந்த் சிங் தலைமையில் பாஜக அரசு பொறுப்பேற்றது.
இந்த மாநிலத்தில் மைதேயி-குகி சமூகத்தினா் இடையே கடந்த 2023-இல் ஏற்பட்ட பெரும் கலவரத்தின்போது, ஜிரிபாம் மாவட்டம் மோசமாக பாதிக்கப்பட்டது. இந்த வன்முறையின்போது சுமார் 260 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கானோர் வீடற்றவர்களாகினர். வீடிழந்த மைதேயி சமூகத்தைச் சோ்ந்த ஏராளமானோா், அரசின் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டனர்.
Advertisement
Advertisement
வடகிழக்கு மாநிலத்தில் இன வன்முறையால் பாதிக்கப்பட்ட இடம்பெயர்ந்த மக்களுக்கான பிரதமரின் ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டுவதற்கு சிவராஜ் சௌகான் ஒப்புதல் அளித்ததாக, திங்கள்கிழமை மாலை புதுதில்லியில் மணிப்பூர் முதல்வர் யும்நாம் கெம்சந்த் சிங்கை சந்தித்த பிறகு இவ்வாறு தெரிவித்தார்.
மாநிலத்தில் அமைதியையும் இயல்பு நிலையையும் கொண்டுவர அனைத்து உதவிகளையும், மத்திய அமைச்சர் உறுதியளித்ததாக அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மாதத் தொடக்கத்தில், இடம்பெயர்ந்த மக்களுக்காக 5,000 வீடுகள் கட்டுவதற்கான திட்டத்தை மணிப்பூர் அரசு சமர்ப்பித்திருந்தது. மார்ச் 31 ஆம் தேதிக்குள் உள்நாட்டில் இடம்பெயர்ந்த 10,000 குடும்பங்களை மீண்டும் குடியேற்ற இலக்கு வைத்துள்ளதாக மாநில அரசு ஜனவரி மாதம் கூறியிருந்தது.
இந்த நிலையில், மாநிலத்தில் இதுவரை 16,500 இடம்பெயர்ந்தோர் மீண்டும் குடியேற்றப்பட்டுள்ளனர். இதனிடையே 5 ஆயிரம் இடம்பெயர்ந்த மக்களுக்கு வீடுகள் கட்டித்தர மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக அமைச்சர் சிவராஜ் சிங் சௌகான் தெரிவித்துள்ளார்.