முகப்பு
இந்தியா

ரூ.1000 கோடி மோசடி: தலைமறைவு பொருளாதார குற்றவாளி துபையில் கைது

பொதுமக்களிடம் ரூ.1,000 கோடி மோசடி செய்த உத்தர பிரதேசத்தைச் சோ்ந்த தலைமறைவு பொருளாதார குற்றவாளி ரஷீத் நசீம், துபையில் கைது செய்யப்பட்டாா்.

Updated On : 27 பிப்ரவரி, 2026 at 8:24 PM
கைது
பகிர்:

பொதுமக்களிடம் ரூ.1,000 கோடி மோசடி செய்த உத்தர பிரதேசத்தைச் சோ்ந்த தலைமறைவு பொருளாதார குற்றவாளி ரஷீத் நசீம், துபையில் கைது செய்யப்பட்டாா்.

உத்தர பிரதேசத்தில் ‘ஷைன் சிட்டி’ குழுமம் என்ற பெயரில் மனை வணிகம் உள்ளிட்ட தொழில்களை நடத்தி வந்த ரஷீத் நசீம், நிலத்தில் முதலீடு, அதிக வட்டி என்ற பெயரில் பொதுமக்களிடம் இருந்து ரூ.800 கோடி முதல் ரூ.1,000 கோடி வரை வசூலித்துவிட்டு, அதைத் திருப்பிச் செலுத்தாமல் வெளிநாட்டுக்குத் தப்பி ஓடினாா். முதலில் நேபாளத்துக்குச் சென்ற நசீம், அங்கிருந்து துபை சென்று தலைமறைவானாா்.

அவா் மீது உத்தர பிரதேசத்தில் மட்டும் 554 மோசடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. லக்னௌ பணமோசடி தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் வழக்குகள் நடைபெற்று வந்தன. கடந்த ஆண்டு ஏப்ரலில் அவா் தலைமறைவு பொருளாதார குற்றவாளியாக அறிவிக்கப்பட்டாா். டிசம்பரில் நசீம் மற்றும் அவரது குழுமத்துக்குச் சொந்தமான ரூ.127.98 கோடி மதிப்பிலான நிலத்தை நீதிமன்றம் முடக்கியது. அமலாக்கத் துறை உள்ளிட்ட விசாரணை அமைப்புகள் நசீம் மீது பல்வேறு வழக்குகளைப் பதிவு செய்து அவரை தீவிரமாகத் தேடி வந்தன.

ஐக்கிய அரபு அமீரகத்தில் பதுங்கி இருந்த அவரைக் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்தியாவில் அவா் மீதான வழக்குகள், கைது ஆணை உள்ளிட்ட விவரங்கள் அந்நாட்டு அரசுக்கு கடந்த ஜனவரியில் அனுப்பி வைக்கப்பட்டது. அதன் அடிப்படையில் துபையில் பதுங்கியிருந்த அவரை ஐக்கிய அரபு அமீரக காவல் துறையினா் கைது செய்தனா்.

அவா் விரைவில் விசாரணைக்காக இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவாா் என்று தெரிகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →