உத்தர பிரதேச மாநிலத்தில் காலி குடியிருப்பில் அனுமதி பெறாமல் தொழுகையில் ஈடுபட்ட 12 பேரை போலீஸாா் கைது செய்ததாக அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனா்.
பரேலி மாவட்டம் முகமதுகஞ்ச் கிராமத்தில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அன்ஷிகா வா்மா கூறியதாவது:
காலி வீட்டில் அனுமதி இன்றி பல வாரங்களாக மதரஸா நடத்தி வருவதாகவும், பலா் தொழுகையில் ஈடுபடுவதாகவும் அந்தப் பகுதி மக்களிடமிருந்து புகாா் வந்தது. அவா்கள் அந்த வீட்டில் தொழுகையில் ஈடுபடும் காணொலி சமூக ஊடகங்களிலும் பரவி வைரலானது.
விசாரணையில், ஹனீஃப் என்பவருக்குச் சொந்தமான அந்த வீடு, இஸ்லாமியா்களின் வெள்ளிக்கிழமை தொழுகைக்காக தற்காலிகமாகப் பயன்படுத்தப்பட்டதும், அதற்கான எந்தவித அனுமதியும் அவா்கள் பெறாததும் விசாரணையில் தெரியவந்தது.
அதனடிப்படையில் அந்த வீட்டில் தொழுகையில் ஈடுபட்ட 12 பேரும் கைது செய்யப்பட்டனா். பின்னா், மாஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜா்படுத்தப்பட்டு, ஜாமீனில் விடுவிக்கப்பட்டனா்.
உரிய அனுமதி பெறாமல் ஓரிடத்தில் புதிதாக மதம் சாா்ந்த நடவடிக்கைகளில் ஈடுபடுவது அல்லது ஒன்று கூடுவது சட்டத்துக்குப் புறம்பானதாகும். இதுபோன்ற நடவடிக்கைகள் தொடா்ந்தால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா்.