பிரதமர் வடக்கில் சரிசெய்துவிட்டு தெற்கே வரட்டும்: காங்கிரஸ் விமர்சனம்
வட மாநிலங்களில் உள்ள பிரச்னைகளைத் தீர்த்துவிட்டு, தென் மாநிலங்களில் பாஜக ஆட்சி அமைக்கட்டும்: காங்கிரஸ்
கேரளத்தில் ஒருபோதும் பாஜக ஆட்சி அமையாது என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
கேரளத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் வருகையைக் குறிப்பிட்டுப் பேசிய காங்கிரஸ் தேசிய செய்தித் தொடர்பாளர் ஷாமா முகமது, "பிரதமர் மோடியை கேரளத்தில் வரவேற்கிறேன். விருந்தோம்பலில் கேரளம் மிகவும் சிறந்த மாநிலம். அவருக்கு நல்ல உணவையும் கொடுப்போம்.
ஆனால், அவர் நினைவில் கொள்ளவேண்டிய விஷயம் என்னவென்றால், கேரளத்தில் ஒருபோதும் பாஜக ஆட்சி அமையாது. அவர் வந்த வழியே திரும்பிச் செல்லட்டும்.
கேரளம், தமிழ்நாட்டில் ரயில்கள் மற்றும் பல திட்டங்களைத் தொடக்கிவைக்க பிரதமர் மோடி வருகை தருகிறார். ஆனால், மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், குஜராத் ஆகிய மாநிலங்களில் மாசடைந்த குடிநீரால் மக்கள் இறப்பதைப் பற்றி பிரதமர் மோடி பதில்கூற வேண்டும்.
தில்லியின் நிலையையும் பாருங்கள். தில்லியில் நகராட்சியே இல்லை; முழுவதும் மாசுபாடுதான்.
பாஜக தெற்கே வருவதற்கு முன்னால், வடக்கில் உள்ள பிரச்னைகளைச் சரி செய்யட்டும்" என்று தெரிவித்தார்.
முன்னதாக, கேரளத்தில் ரயில் சேவையைத் தொடக்கிவைத்த பிரதமர் மோடி, நிகழ்ச்சியில் பேசுகையில், "குஜராத்தின் ஒரு நகரத்தில் இருந்து ஆட்சி தொடங்கியதுபோல, கேரளத்திலும் பாஜக ஆட்சி அமையும்" என்று தெரிவித்திருந்தார்.