எடப்பாடி பழனிசாமி தலைமையில் கூட்டணி ஆட்சி: பியூஷ் கோயல்
தமிழகத்தில் மீண்டும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சி கொண்டுவரப்படும்: மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்
தமிழகத்தில் மீண்டும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சி கொண்டுவரப்படும் என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
திருச்சியில் செய்தியாளர்கள் சந்திப்பில் மத்திய அமைச்சரும் தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளருமான பியூஷ் கோயல் பேசுகையில், "தமிழ்நாட்டு மக்கள் ஒரு மாற்றத்தையும் நல்லாட்சியையும் விரும்புகின்றனர்.
அவர்கள் ஸ்டாலினின் ஊழல் அரசை முடிவுக்குக் கொண்டுவர விரும்புகின்றனர். தமிழ்நாட்டு மக்களுக்கு உதயநிதி ஸ்டாலினின் தமிழ்விரோத கலாசாரம், தமிழர் விரோத தலைமை பிடிக்கவில்லை.
Advertisement
Advertisement
மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியையும், மாநிலத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியையும்தான் தமிழக மக்கள் விரும்புகின்றனர். எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியமைக்கும்.
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின், பிளவுபடுத்தும் அரசியல் செய்து வருகிறார். துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் தலைமையை திமுகவே ஏற்கவில்லை.
பிரதமர் மோடி தமிழக மக்களை பெரிதும் நேசிக்கிறார். தமிழ்க் கலாசாரத்தையும் பெருமையையும் அவர் மதிக்கிறார். நாட்டிலேயே சிறந்த மாநிலமாக தமிழகம் திகழ வேண்டும் என்று பிரதமர் விரும்புகிறார்.
மத்திய அரசின் அனைத்து திட்டங்களும் மாநிலத்தில் செயல்படுத்தப்பட வேண்டும் என்றும், மக்களின் வளர்ச்சிக்காக பாடுபடும் தமிழக அரசுடன் இணைந்து செயல்படவும் பிரதமர் விரும்புகிறார்.
டாஸ்மாக் மதுபான ஊழல், மணல் கொள்ளை, மோசமான சட்டம்-ஒழுங்கு நிலைமையை முடிவுக்குக் கொண்டுவரப்படும். அம்மாவின் (முன்னாள் முதல்வர் ஜெயலலிதா) பழைய ஆட்சி மீண்டும் கொண்டுவரப்படும்.
வாக்காளர்கள் வாக்களிக்கும்போது திமுகவின் கனவுகள் அனைத்தும் சிதைந்து விடும்.
முதல்வர் ஸ்டாலினின் பிளவுபடுத்தும் அரசியலை மக்கள் ஏற்கவில்லை. அவர்களின் கட்சியே பிளவுபட்டுள்ளது. மக்களின் ஆதரவை அவர்கள் இழந்து விட்டனர்.
உதயநிதி ஸ்டாலின் தலைமையை திமுகவே ஏற்கவில்லை. இருப்பினும், உதயநிதி ஸ்டாலினை ஏற்றுக்கொள்ளுமாறு திமுகவை ஸ்டாலின் கட்டாயப்படுத்த முயற்சிக்கிறார்" என்று தெரிவித்தார்.
MK Stalin has lost the support of the people, says Union Minister Piyush Goyal
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.