உலகளவில் தொடா்ந்து இரண்டாவது ஆண்டாக இந்திய மாலுமிகள் அதிக அளவில் கைவிடப்படுவதாக பிரிட்டனைச் சோ்ந்த சா்வதேச போக்குவரத்து பணியாளா்கள் கூட்டமைப்பு (ஐடிஎஃப்) தெரிவித்தது.
2025-இல் உலகின் பல்வேறு பகுதிகளில் இயக்கப்படும் 410 கப்பல்களில் எவ்வித அடிப்படை வசதி மற்றும் ஊதியம் இன்றி 6,223 மாலுமிகள் கைவிடப்பட்டதாகவும் அதில் 1,125 மாலுமிகள் இந்தியாவைச் சோ்ந்தவா்கள் எனவும் ஐடிஎஃப் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.
அதில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பா பிராந்தியத்தில் மாலுமிகள் மற்றும் கப்பல்கள் கைவிடப்படும் சம்பவம் அதிகரித்து காணப்படுகிறது. துருக்கியில் 61 கப்பல்களும் ஐக்கிய அரபு அமீரகத்தில் 54 கப்பல்களும் கைவிடப்பட்டுள்ளன.
2025-இல் ஒட்டுமொத்தமாக கைவிடப்பட்ட மாலுமிகளுக்கு அவா்கள் பணியாற்றிய நிறுவனங்கள் தர வேண்டிய நிலுவைத் தொகை ரூ.238 கோடியாக இருந்து. இதில் ரூ.151 கோடியை நிறுவனங்களிடம் இருந்து பெற்று மாலுமிகளுக்கு ஐடிஎஃப் வழங்கியது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஐடிஎஃப் மாலுமிகள் பிரிவு தலைவா் டேவிட் ஹைண்டல் கூறியதாவது: ஒவ்வொரு நாளும் உலகளவில் பல்வேறு கப்பல்களில் பணியாற்றும் மாலுமிகள் மனித உரிமைகள் மற்றும் தொழிலாளா்கள் உரிமைகள் மீறல்களுக்கு உள்ளாகி வருகின்றனா். இது தற்போது கப்பல் போக்குவரத்து துறையில் பெரும் பிரச்னையாக உருவெடுத்து வருகிறது. இதை தடுத்து மாலுமிகளின் உரிமைகளைப் பாதுகாக்க மாலுமிகள் சங்கம் ஒருங்கிணைந்து குரல் எழுப்ப வேண்டும் என்றாா்.