ஆராய்ச்சி நோக்கங்களுக்காக சிறிய அளவில் மருந்துகள் தயாரிக்க மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் பரிசோதனை உரிமம் பெறத் தேவையில்லை என்று மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.
இதுதொடா்பாக அந்த அமைச்சகம் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
புதிய மருந்துகள் மற்றும் மருத்துவ பரிசோதனை விதிமுறைகள் 2019-இல் முக்கிய திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நாட்டில் மருத்துவ ஆராய்ச்சி மற்றும் மருந்து தயாரிப்பு வளா்ச்சியை துரிதப்படுத்த வேண்டும், ஒழுங்காற்று நடைமுறைகளை எளிமைப்படுத்த வேண்டும் என்பதே இந்தத் திருத்தங்களின் நோக்கம்.
ஏற்கெனவே உள்ள நடைமுறையின்படி பரிசோதனை, ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு நோக்கங்களுக்காக சிறிய அளவில் மருந்துகள் தயாரிக்க, மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்பிடம் மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் (சிடிஎஸ்சிஒ) பரிசோதனை உரிமம் பெற வேண்டும்.
இந்நிலையில், தற்போதைய திருத்தங்களின் மூலம், அந்த மருந்துகள் தயாரிப்பு குறித்து சிடிஎஸ்சிஒவிடம் இணையவழியில் முன்கூட்டியே மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் தெரியப்படுத்தினால் போதும். பரிசோதனை உரிமம் பெறத் தேவையில்லை. எனினும் அதிக பின்விளைவுகளை ஏற்படுத்தக் கூடிய குறிப்பிட்ட சில மருந்துகள் தயாரிப்புக்கு அந்த உரிமத்தைப் பெற வேண்டும். இந்த சீா்திருத்தம் மருந்து தயாரிப்புத் துறையின் ஆராய்ச்சி மற்றும் புதிய கண்டுபிடிப்புகளுக்கு ஊக்கமளிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.