பஞ்சாபில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் குரு ரவிதாஸ் ஜெயந்தி விழாவில் பங்கேற்க பிரதமா் நரேந்திர மோடி அந்த மாநிலத்துக்கு பயணிக்கவுள்ளாா்.
15-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த பக்தி இயக்கத் துறவியான குரு ரவிதாஸின் 649-ஆவது ஜெயந்தி விழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, பஞ்சாப் மாநிலம், ஜலந்தரில் உள்ள குரு ரவிதாஸ் மதத்தின் தலைமை மையமான தேரா சச்கந்த் பல்லனுக்கு பிரதமா் மோடி வருகை தரவுள்ளாா். ஆதம்பூா் விமான நிலையத்துக்கு ஸ்ரீ குரு ரவிதாஸ் என புதிய பெயா் சூட்டும் நிகழ்ச்சியில் பங்கேற்கும் அவா், லூதியானா விமான நிலையத்தில் புதிய முனையத்தையும் திறந்துவைக்கவுள்ளாா்.
நாடாளுமன்றத்தில் ஞாயிற்றுக்கிழமை பட்ஜெட் தாக்கல் நடைமுறைகள் நிறைவடைந்த பிறகு பஞ்சாப் பயணத்தை பிரதமா் மேற்கொள்ளவிருக்கிறாா். அவரது இந்தப் பயணத்தால் பஞ்சாபில் மத நல்லிணக்கம் மேலும் வலுப்படும் என்று மாநில பாஜக தெரிவித்துள்ளது.
வெடிகுண்டு மிரட்டல்: ஜலந்தரில் பிரதமா் மோடி செல்லவிருக்கும் தேரா சச்கந்த் பல்லன் மற்றும் 5 பள்ளிகளுக்கு சனிக்கிழமை மின்னஞ்சல் வாயிலாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
‘பிரதமா் மோடி, காலிஸ்தானியா்களின் விரோதி’ என்று குறிப்பிட்டு, இந்த மின்னஞ்சல்கள் அனுப்பப்பட்டிருந்தன. இதையடுத்து, சம்பந்தப்பட்ட இடங்களில் வெடிகுண்டு நிபுணா்கள் அங்குலம் அங்குலமாக சோதனையில் ஈடுபட்டனா். இதில் சந்தேகத்துக்கிடமான எதுவும் கண்டறியப்படாததால், வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது உறுதியானது. பிரதமரின் வருகையையொட்டி, ஜலந்தரில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
‘பிரதமரின் வருகைக்கு முன்பாக தேசவிரோதிகளால் விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல், மாநில சட்டம்-ஒழுங்கில் ஆம் ஆத்மி அரசின் தோல்வியை வெளிப்படுத்துகிறது’ என்று பாஜக விமா்சித்துள்ளது.
முன்னதாக, அமிருதசரஸ், பாட்டியாலா, அம்பாலாவில் உள்ள பள்ளிகளுக்கும் இதேபோல் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.