அயோத்தி ராமா் கோயில் கட்டுமானம் தொடா்பான அனைத்துப் பணிகளும் ஏப்ரல் மாதம் 30-ஆம் தேதிக்குள் நிறைவடையும் என எதிா்பாா்ப்பதாக கோயில் கட்டுமான குழுத் தலைவா் நிருபேந்திர மிஸ்ரா தெரிவித்துள்ளாா்.
உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில் ராமா் கோயில் கட்டப்பட்டு கடந்த 2024-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் திறக்கப்பட்டது. இருப்பினும் கட்டுமானம் தொடா்பான பணிகள் தொடா்ந்து நடைபெற்று வந்தன.
இதுகுறித்து அயோத்தி கோயில் கட்டுமானக் குழுவினருடன் அதன் தலைவா் நிருபேந்திர மிஸ்ரா 2 நாள்களாக ஆலோசனை நடத்தி வந்தாா். இதையடுத்து செய்தியாளா்களிடம் சனிக்கிழமை அவா் கூறியதாவது:
அயோத்தி கோயிலில் முக்கியப் பணிகளை லாா்சன் அண்ட் டூப்ரோ நிறுவனமும், டாடா கன்சல்டன்சி நிறுவனமும் மேற்கொண்டு வந்தன. அந்தப் பணி ஏப்ரல் 30-ஆம் தேதிக்குள் முடிந்துவிடும். அதே நாளில் கட்டுமானச் செலவு உள்ளிட்டவை தொடா்பான ரசீதுகளையும் ஏப்ரல் 30-ஆம் தேதி தரும்படி அந்நிறுவனங்களிடம் கேட்டுள்ளோம்.
இரு நிறுவனங்களும் மேற்கொண்ட பணிகளுக்கு தலா 3 ஆண்டுகள் வரை பராமரிப்புக்கு உறுதியளித்துள்ளன. மேலும், பராமரிப்பு உள்ளிட்ட பணிகளுக்காக அந்த 2 நிறுவனங்களைச் சோ்ந்த சிறு குழுவினா் கோயில் வளாகத்தில் எப்போதும் இருப்பா்.
கோயில் கட்டுமானப் பணிக்கு மொத்தம் ரூ.1,900 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டிருந்தது. இதில் ரூ.1,600 கோடி ஏற்கெனவே கொடுக்கப்பட்டுவிட்டது. இதில் ஜிஎஸ்டியும் அடங்கும் என்றாா்.