கரப்பான்பூச்சி கட்சியின் பின்புலத்தில் நக்ஸலைட்டுகள்: பாஜக
கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் பின்புலத்தில் நக்ஸலைட்டுகள் இருப்பதாக பாஜக தலைவர் பேசியது பற்றி...
கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் பின்புலத்தில் நக்ஸலைட்டுகள் இருப்பதாக தெலங்கானாவின் பாஜக மாநிலத் தலைவர் ராமச்சந்தர் ராவ் வியாழக்கிழமை குற்றம் சாட்டியுள்ளார்.
தலைமை நீதிபதி ஒருவரின் விமர்சனத்தால் கோபமடைந்த இளைஞர்கள், அந்த வார்த்தையையே தங்களின் அடையாளமாக மாற்றி, கடந்த மே 16 ஆம் தேதி அபிஜித் திப்கே என்ற டிஜிட்டல் கிரியேட்டர் தலைமையில் 'கரப்பான்பூச்சி மக்கள் கட்சி' (சிஜேபி) என்ற நையாண்டி பக்கத்தை முகநூல் மற்றும் எக்ஸ் தளங்களில் தொடங்கினர். தொடங்கிய சில நாளிலேயே அந்த சமூக வலைதளப் பக்கங்களை கோடிக்கணக்கில் மக்கள் பின்தொடர்ந்தனர்.
இவர்கள் நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்துக்கு எதிராக குரல்களை எழுப்புவது, கட்சிக்கென செய்தித் தொடர்பாளர்களை நியமிப்பது போன்ற செயல்பாடுகளில் ஈடுபட்டுள்ளனர்.
Advertisement
Advertisement
இது குறித்து பாஜக மாநிலத் தலைவர் ராமச்சந்தர் ராவ் பேசியதாவது:
பிரச்னைகளுக்கு எதிராக போராட இளைஞர்களுக்கு உரிமை உண்டு. இங்கு பல மாணவர் அமைப்புகள் உள்ளன. அனைத்து மாணவர்களும் பாஜக-வையோ அல்லது ஏபிவிபி-யையோ பின்பற்ற வேண்டும் என்று நான் கூறவில்லை. கரப்பான் பூச்சி மக்கள் கட்சி என்பது ஒரு புதிய நிகழ்வு அல்ல.
ஆம் ஆத்மி கட்சி போன்ற கட்சிகளுடன் தொடர்புடையவர்களால் இது உருவாக்கப்பட்டுள்ளது. அவர்கள் சமூக ஊடகங்கள் மூலம் சில குறிப்பிட்ட கருத்துகளைப் பரப்ப முயற்சிக்கின்றனர். மேலும் அவர்களுக்கு உண்மையான அடித்தளம் எதுவும் இல்லை.
கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் பின்புலத்தில் நக்ஸலைட்டுகள் மற்றும் ஆம் ஆத்மி போன்ற அமைப்புகள் உள்ளன என்று தெரிவித்தார்.
இந்த நிலையில் வரும் ஜூன் 6 ஆம் தேதி கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் தலைவர் அபிஜித் திப்கே தலைமையில் நீட் விவகாரத்தில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி, அமைதி வழியில் போராட்டம் நடத்த இருப்பது குறிப்பிடத்தக்கது.